வேலூரில் இன்று நடக்கிறது உரிமையியல் நீதிபதி பணிக்கான முதல்நிலை தேர்வு


வேலூரில் இன்று நடக்கிறது உரிமையியல் நீதிபதி பணிக்கான முதல்நிலை தேர்வு
x
தினத்தந்தி 8 Jun 2018 11:12 PM GMT (Updated: 8 Jun 2018 11:12 PM GMT)

இன்று நடக்க இருக்கும் உரிமையியல் நீதிபதி பணிக்கான முதல்நிலை தேர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட நீதிபதி தலைமையில் நடந்தது.

வேலூர்,

உரிமையியல் நீதிபதி பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. வேலூர் மாவட்டத்தில் 269 பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். இதற்காக வேலூரில் உள்ள ஈ.வெ.ரா. நாகம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 14 அறைகளில் தேர்வு நடக்கிறது.

தேர்வுக்கு தேவையான கேள்வித்தாள்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இன்று தேர்வு நடைபெற இருப்பதை முன்னிட்டு தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.

கலெக்டர் ராமன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட நீதிபதி ஆனந்தி தலைமை தாங்கி முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது “காலை 10 மணி முதல் 12 மணிவரை 2 மணிநேரம் தேர்வு நடைபெறும். தேர்வு எழுதுபவர்கள் 9.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்துவிடவேண்டும். செல்போன் கொண்டுவர அனுமதி கிடையாது. அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதமாக வருபவர்கள் 10.30 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்” என்று மாவட்ட நீதிபதி கூறினார்.

மேலும் தேர்வு மையத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை பணிகளான தடையில்லா மின்சார வசதி, பாதுகாப்பு வசதி, குடிநீர் மற்றும் தேர்வின்போது கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் குறித்தும், பஸ்வசதி குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கூட்டம் முடிந்ததும் கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மாவட்ட நீதிபதி, கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கூடுதல் நீதிபதி மீனாக்குமாரி, மகளிர் கோர்ட்டு நீதிபதி செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், டி.என்.பி.எஸ்.சி. சார்பு செயலாளர் லோகநாதன் மற்றும் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story