கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை அடுத்த மாதம் முதல் வாரத்தில் கர்நாடக பட்ஜெட் தாக்கல்


கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை அடுத்த மாதம் முதல் வாரத்தில் கர்நாடக பட்ஜெட் தாக்கல்
x
தினத்தந்தி 9 Jun 2018 9:30 PM GMT (Updated: 9 Jun 2018 9:18 PM GMT)

கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், கர்நாடக பட்ஜெட் அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், கர்நாடக பட்ஜெட் அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள தனது வீட்டில் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எந்த பிரச்சினையும் இல்லை

முதல்-மந்திரி பதவியை தக்க வைத்து கொள்வதற்காக அரசியல் செய்வதை விட, மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை அளித்து வருகிறேன். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு செய்யும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. மந்திரிசபை விரிவாக்கத்தால் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை.

துறைகள் ஒதுக்குவதில் ஜி.டி.தேவேகவுடா, புட்டராஜ் அதிருப்தி அடைந்திருப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல. ஜி.டி.தேவேகவுடாவுக்கு உயர்கல்வி துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதை விட பெரிய துறை இருக்கிறதா?. அதுபோல, புட்டராஜிக்கு சிறிய நீர்ப்பாசனத்துறை வழங்கப்பட்டுள்ளது. மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து துறைகளுமே முக்கியமானது தான். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள துறைகளை மந்திரிகள் சிறப்பாக நிர்வகிக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஜூலை முதல் வாரம் பட்ஜெட்

எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் நிதி மந்திரியோ, வேறு மந்திரி பதவியோ வேண்டும் என்று என்னிடம் கேட்கவில்லை. அப்படி இருக்கும் போது துறைகள் ஒதுக்கியதில் மந்திரிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டதாக கூறுவது சரியல்ல. காங்கிரஸ் கட்சியில் மந்திரி பதவி கிடைக்காமல் சிலர் அதிருப்தியில் உள்ளார்கள். காங்கிரஸ் கட்சியில் இன்னும் 6 மந்திரி பதவிகள் காலியாக உள்ளன. அதிருப்தியில் உள்ளவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம். அதனால் காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்சினையும் இன்னும் ஒரு வாரத்திற்குள் சரியாகி விடும் என்று நம்புகிறேன். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மாட்டேன் என்று நான் ஒருபோதும் கூறவில்லை.

எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவியில் இருந்தபோது, விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்துள்ளாரா?. அதுபற்றி எடியூரப்பா பேச தயாரா?. பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டும் அல்லாமல், பா.ஜனதா கட்சியை சேர்ந்த பிரமுகர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றி மத்திய அரசு உடனடியாக தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படலாம். ஒருவேளை முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட முடியாமல் போனால், ஜூலை 2-வது வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

Next Story