வேடசந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி பெண், தீயணைப்பு படையினர் மீட்டனர்


வேடசந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி பெண், தீயணைப்பு படையினர் மீட்டனர்
x
தினத்தந்தி 10 Jun 2018 10:45 PM GMT (Updated: 10 Jun 2018 9:59 PM GMT)

வேடசந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி பெண்ணை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்

வேடசந்தூர், 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் ஜோதி. அவருடைய மனைவி மாரியம்மாள். இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ரேவதி (வயது 21) என்ற மகள் உள்ளார். இவர், 2 கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவார். திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல ஜோதி, மாரியம்மாள் ஆகியோர் மில்லுக்கு வேலைக்கு சென்று விட்டனர். அப்போது, ஊர் அருகே உள்ள தனது தோட்டத்துக்கு ஒத்தையடி பாதை வழியாக தவழ்ந்தபடி ரேவதி சென்றார். அப்போது பாதையோரத்தில் உள்ள கிணற்றுக்குள் அவர் தவறி விழுந்து விட்டார். 20 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால் அவருடைய உடலில் காயம் ஏற்பட்டது. கிணற்றுக்குள் விழுந்த ரேவதி, தன்னை காப்பாற்றுமாறு அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு கயிறு மூலம் ரேவதியை மீட்டனர். காயம் அடைந்த அவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story