மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று ரவுடியை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்கள் பாராட்டு


மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று ரவுடியை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 11 Jun 2018 12:42 AM GMT (Updated: 11 Jun 2018 12:42 AM GMT)

மயிலாப்பூரில் சினிமா பாணியில் ரவுடியை மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று பிடித்த சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

அடையாறு,

சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகரைச் சேர்ந்தவர் டொக்கன் என்ற டொக்கன் ராஜா(வயது 45). ரவுடியான இவர், பிரபல ரவுடி சி.டி.மணியின் கூட்டாளி ஆவார். கொலை வழக்குகளில் தொடர்புடைய ராஜா, போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரவுடி ராஜா, பல்லக்கு மாநகரில் இருப்பதாக மயிலாப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அந்த பகுதியில் தனித்தனியாக சென்று ரவுடியை தேடினர்.

அப்போது அங்குள்ள ஒரு டீக்கடை அருகே ரவுடி ராஜா நிற்பதை கண்ட சப்-இன்ஸ்பெக்டர், அவரை நோக்கி சென்றார். இதை பார்த்த ரவுடி ராஜா, உடனடியாக தனது மோட்டார் சைக்கிளில் ஏறி ஆழ்வார்பேட்டை நோக்கி தப்பிச்சென்றார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் ராஜாவும், சினிமாவில் வருவதுபோல் தனது மோட்டார் சைக்கிளில் ரவுடி ராஜாவை துரத்தியபடி சென்றார். போலீசிடம் சிக்காமல் இருக்க ரவுடி ராஜா வேகமாக செல்ல, அவரை விரட்டிபடி சப்-இன்ஸ்பெக்டரும் பின்தொடர்ந்து சென்றார்.

நீண்ட நேர துரத்தலுக்கு பிறகு ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த ரவுடி ராஜாவின் மோட்டார் சைக்கிள் மீது சப்-இன்ஸ்பெக்டர் தனது மோட்டார் சைக்கிளை இடித்து அவரை கீழே தள்ளி விட்டார்.

பின்னர் அவரை பிடிக்க முயன்றார். அப்போது ரவுடி ராஜா, தன்னிடம் இருந்த கத்தியை காட்டி மிரட்டி தப்பிச்செல்ல முயன்றார். உடனே சப்-இன்ஸ்பெக்டர், லாவகமாக அவர் மீது பாய்ந்து கீழே தள்ளி, தப்ப விடாமல் பிடித்தார். இதனால் ரவுடியும், சப்-இன்ஸ்பெக்டரும் சாலையில் கட்டிப்புரண்டு உருண்டனர்.

இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், சப்-இன்ஸ்பெக்டருக்கு உதவியாக ரவுடியை தப்ப விடாமல் வளைத்து பிடித்தனர். இதற்கிடையில் அவருடன் வந்த சக போலீசாரும் அங்கு வந்து, ரவுடி ராஜாவை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர். அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்த போலீசார், பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ரவுடியுடன் சாலையில் கட்டுப்புரண்டு உருண்டதில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவுக்கு கை மணிக்கட்டு மற்றும் காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

ரவுடி ராஜாவை உயிருக்கு பயப்படாமல் தன்னந்தனியாக சினிமா பாணியில் விரட்டிச்சென்று மடக்கி பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

மேலும் மயிலாப்பூர் உதவி கமிஷனர் விஸ்வேஸ்வர அய்யா, துணை கமிஷனர் சரவணன் ஆகியோரும் நேரில் அழைத்து சப்-இன்ஸ்பெக்டரை பாராட்டினர்.

Next Story