பெண் மர்மச்சாவு கள்ளக்காதலை காட்டி கொடுத்ததால் கொலை செய்யப்பட்டது அம்பலம் 3 பேர் கைது


பெண் மர்மச்சாவு கள்ளக்காதலை காட்டி கொடுத்ததால் கொலை செய்யப்பட்டது அம்பலம் 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2018 11:15 PM GMT (Updated: 11 Jun 2018 9:43 PM GMT)

திருமருகல் அருகே பெண் மர்மச்சாவு வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலங்கியது. கள்ளக்காதலை காட்டி கொடுத்ததால் அந்த பெண் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதுதொடர்பாக மருமகள்-கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மானாம்பேட்டை காலனி தெருவை சேர்ந்தவர் விஜயா(வயது 55). இவருக்கு தியாகேசன், செந்தில்(28) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜயா கடந்த 23.6.2016 அன்று விறகு வெட்டுவதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அவருடைய மூத்த மகன் தியாகேசன், மருமகள் மதியழகி ஆகியோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது மானாம்பேட்டை முத்துக்கோனார் புயங்கூண்டு என்ற இடத்தில் விஜயா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து தியாகேசன் திட்டச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், மர்மசாவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், விஜயா கொலை செய்யப்பட்டதும், இதில் விஜயாவின் 2-வது மகன் செந்தில்(28), அவருடைய மனைவி பரிமளா(23) மற்றும் பரிமளாவின் கள்ளக்காதலன் சின்னமணி(34) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் அம்பலமானது. இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

செந்தில் மனைவி பரிமளாவுக்கும், சின்னமணிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று செந்திலும், பரிமளாவும் அருகில் உள்ள ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது பரிமளா இயற்கை உபாதையை கழிக்க செல்வதாக செந்திலிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மறைந்திருந்த கள்ளக்காதலன் சின்னமணியும், பரிமளாவும் அங்குள்ள புதரில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அப்போது அந்த பகுதியில் விறகு வெட்டுவதற்காக வந்த விஜயா, பரிமளாவும், சின்னமணியும் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்துள்ளார். உடனே அவர் அங்கிருந்து சென்று ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த மகன் செந்திலிடம் இந்த தகவலை தெரிவித்து அவரையும் அங்கு அழைத்து வந்துள்ளார்.

கள்ளக்காதலனுடன் தான் உல்லாசமாக இருந்ததை தனது கணவரிடம் கையும், களவுமாக மாட்டி விட்ட மாமியார் விஜயா மீது ஆத்திரமடைந்த பரிமளாவும், அவரது கள்ளக்காதலன் சின்னமணியும் சேர்ந்து விஜயாவை தாக்கி உள்ளனர்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே விஜயாவின் உடலை அருகில் இருந்த புதரில் வீசி உள்ளனர். இதனை வெளியில் சொன்னால் உன்னையும் கொலை செய்து விடுவோம் என்று செந்திலையும் அவர்கள் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன செந்தில் இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் செல்லாமல் மறைத்து விட்டார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து பரிமளா மற்றும் அவரது கள்ளக்காதலன் சின்னமணி ஆகியோரையும், இந்த கொலையை மறைத்ததுடன், அதற்கு உடந்தையாக இருந்த மகன் செந்திலையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைதான 3 பேரையும் நாகை இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரிமளாவை திருச்சி மத்திய சிறையிலும், செந்தில், சின்னமணி ஆகிய 2 இருவரையும் நாகை சிறையிலும் அடைத்தனர்.

கள்ளக்காதலை காட்டி கொடுத்ததால் மாமியாரை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகளே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story