மக்களின் தீர்ப்புக்கு எதிராக கூட்டணி ஆட்சி அமைத்தது தான் உங்கள் சுயமரியாதையா?


மக்களின் தீர்ப்புக்கு எதிராக கூட்டணி ஆட்சி அமைத்தது தான் உங்கள் சுயமரியாதையா?
x
தினத்தந்தி 11 Jun 2018 11:02 PM GMT (Updated: 11 Jun 2018 11:02 PM GMT)

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.100 கோடி கொடுப்பதாக நான் கூறவில்லை என்று கூறிய எடியூரப்பா, மக்களின் தீர்ப்புக்கு எதிராக கூட்டணி ஆட்சி அமைத்தது தான் உங்கள் சுயமரியாதையா? என்று சித்தராமையாவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது.

சித்தராமையாவுக்கு சாமுண்டீஸ்வரி தொகுதி மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். கர்நாடக தேர்தல் வரலாற்றில் ஒரு முதல்-மந்திரி 36 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது நீங்கள் தான்(சித்தராமையா). சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி பயத்தால் பாதாமி தொகுதிக்கு சென்றீர்கள். அங்கும் வெறும் 1,600 ஓட்டுகள் வித்தியாசத்தில் தப்பி வெற்றி பெற்றீர்கள். இது பெரிய சாதனை இல்லை.

சாமுண்டீஸ்வரி தொகுதியில் பணம் மற்றும் எதிர்க்கட்சிகளின் சதியால் தான் தோல்வி அடைந்ததாக நீங்கள்(சித்தராமையா) கூறி இருக்கிறீர்கள். இது ஜனநாயகத்தில் வாக்களித்த மக்களை அவமதிக்கும் செயல் ஆகும். ஜனநாயகத்தில் அவநம்பிக்கை இருப்பவர்கள் தான் இதுபோல் கூறுவார்கள். இதுபற்றி தெரியாமல் பாதாமி தொகுதி மக்கள் உங்களுக்கு வாக்களித்துவிட்டனர்.

உங்கள் கட்சி முன்பு 122 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பா.ஜனதா 40 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று இருந்தது. நீங்கள் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்தீர்கள். மக்கள் உங்களுக்கு தக்க பாடம் புகட்டி 78 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற செய்துள்ளனர். ஆனால் 40 தொகுதிகளில் மட்டுமே இருந்த எங்கள் கட்சி 104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மக்களின் மனநிலை யார் பக்கம் உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.

ஆயினும் நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பணியாற்ற தயாராகி இருக்கிறோம். தன்னம்பிக்கையுடன் மக்கள் பணியாற்றுவோம். ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்து இழுக்க நான் முயற்சி செய்யவில்லை. மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு என்னை ஆதரியுங்கள் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டேன். அவர்களுக்கு ரூ.100 கோடி பணம் கொடுப்பதாக நான் கூறவில்லை. நீங்கள் கூறிய இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. பணம் கொடுப்பது என்பது உங்களின் கலாசாரம்.

பேச்சுக்கு பேச்சு சுயமரியாதை உள்ளவன் என்று சொல்கிறீர்கள். ஒரு பொறுப்பான பதவியில் இருந்த நீங்கள் இவ்வாறு பேசுவது சரியல்ல. மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளர்கள். இது தான் உங்களின் சுயமரியாதையா?. இவ்வவாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story