வீட்டு உரிமையாளரிடம் 12½ பவுன் நகை திருட்டு எம்.பி.ஏ. பட்டதாரி வாலிபர் கைது


வீட்டு உரிமையாளரிடம் 12½ பவுன் நகை திருட்டு எம்.பி.ஏ. பட்டதாரி வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2018 11:15 PM GMT (Updated: 12 Jun 2018 6:51 PM GMT)

திரு.வி.க.நகரில் வீட்டின் உரிமையாளர் வைத்திருந்த 12½ பவுன் நகையை திருடிய எம்.பி.ஏ. பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திரு.வி.க. நகர்,

பெரம்பூரை அடுத்த திரு.வி.க. நகரில் உள்ள வெற்றி நகரில் வசித்து வருபவர் ஆதிகேசவன்(வயது 50). இவர் சூளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேணுகாம்பாள் (48). இவர்களது வீட்டின் ஒரு பகுதியில் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான இளமதி(33) என்பவர் தனது மனைவி சிவகலாவுடன்(27) வாடகைக்கு வசித்து வந்தார்.

இளமதிக்கு சரியான வேலை ஏதும் கிடைக்கவில்லை. மேலும், வீட்டில் தண்ணீர் வசதி இல்லை எனவும் கூறிய அவர் வீட்டை காலி செய்வதாக உரிமையாளரிடம் தெரிவித்து வீட்டின் உள்ள பொருட்களை சாக்கு பையில் வைத்து கட்டினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதில் பாதியளவு பொருட்களை தனது உறவினரான கொளத்தூர் ஜி.கே.எம். காலனி ஜம்புலிங்கம் தெருவில் வசிக்கும் புஷ்பா(60) என்பவரின் வீட்டிற்கு கொண்டு சென்றார்.

இந்த நிலையில் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 12½ பவுன் தங்க நகைகள் மாயமானதாக நேற்று முன்தினம் நண்பகல் ரேணுகாம்பாள் திரு.வி.க. நகர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணியிடம் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் பெரவள்ளூர் உதவி கமிஷனர் அரிகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தமிழ்வாணன், ரமணி ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

ரேணுகாம்பாள் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த இளமதி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த மற்ற பொருட்களையும் சாக்கு மூட்டையில் கட்டிக்கொண்டு அவசரமாக புறப்பட முயன்றார். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் இளமதியை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்த நகையை திருடியது அவர்தான் என்பது தெரியவந்தது. ரேணுகாம்பாள் வீட்டின் வெளியில் துணி துவைத்து கொண்டு இருந்த வேளையில் நைசாக வீட்டுக்குள் நுழைந்த இளமதி பீரோவில் இருந்த நகையை திருடி உள்ளார்.

பின்பு சாக்கு மூட்டையில் பொருட்களை கட்டியபோது அதில் நகையை வைத்து உறவினர் புஷ்பா வீட்டில் கொண்டு வைத்ததும் தெரியவந்தது. ஆனால் அந்த மூட்டையில் நகை இருந்தது புஷ்பாவுக்கே தெரியாது. இதனைத் தொடர்ந்து புஷ்பாவிடம் இருந்து நகையை பறிமுதல் செய்த போலீசார் நகையை திருடிய இளமதியை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

Next Story