குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி, கலெக்டர் தொடங்கிவைத்தார்


குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி, கலெக்டர் தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 12 Jun 2018 10:30 PM GMT (Updated: 12 Jun 2018 7:15 PM GMT)

ராமநாதபுரத்தில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கலெக்டர் நடராஜன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

ராமநாதபுரம்,

குழந்தைகளை பணிக்கு அனுப்பாமல் கல்வி கற்க பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி குழந்தை தொழிலாளர் முறையினை முழுவதுமாக அகற்றிட விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 12–ந்தேதி நாள் தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று ராமநாதபுரம் அரண்மனை சாலையில் தொழிலாளர் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நடராஜன் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ–மாணவிகள் பங்கேற்ற குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியையும் அவர் தொடங்கிவைத்தார். இந்த பேரணி அரண்மனை சாலையில் தொடங்கி சாலைத்தெரு வழியாக சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் விஸ்வநாதன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், சைல்டு லைன் இயக்குனர் கருப்பசாமி உள்பட அரசு அலுவலர்கள், மாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் குழந்தை தொழிலாளர் முறை தின எதிர்ப்பு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, பரமக்குடி சப்–கலெக்டர் விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story