ரெயில்வே சுரங்கபாதை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு 15-ந் தேதி போராட்டம் நடத்த முடிவு


ரெயில்வே சுரங்கபாதை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு 15-ந் தேதி போராட்டம் நடத்த முடிவு
x
தினத்தந்தி 5 July 2018 10:45 PM GMT (Updated: 5 July 2018 9:31 PM GMT)

சேலம் தாதம்பட்டியில் ரெயில்வே சுரங்கபாதை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக வருகிற 15-ந் தேதி ரெயில் மறியல் போராட்டத்தில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

சேலம்,

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 37-வது வார்டில் தாதம்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனியில் ரெயில்வே சுரங்கபாதை அமைக்கும் பணிகள் ரெயில்வே நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது. ஆனால் பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் சுரங்கபாதை அமைப்பதாக கூறி என்.ஜி.ஜி.ஓ. காலனியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், சேலம் தாதம்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனி மனை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. சங்க தலைவர் லட்சுமணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், ரெயில் வே சுரங்கபாதை அமைக்கும் பணியை உடனே நிறுத்தக்கோரியும், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 15-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் என்.ஜி.ஜி.ஓ. காலனி மனை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் லட்சுமணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் தாதம்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனியில் 40 அடி பிரதான சாலையில் 14 அடி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மீதம் உள்ள 26 அடி பாதையில் ரெயில்வே சுரங்கபாதை அமைக்கப்படுகிறது. இதற்கு மாநகராட்சியின் அனுமதி பெறவில்லை. ரெயில்வே சுரங்கபாதை அமைக்கும் இடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 2 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. தற்போது அதை அகற்றுவதற்கு முடிவு செய்துள்ளனர். சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் வறட்சி காலத்தில் அந்த ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்து வருகிறார்கள். இந்த 2 ஆழ்துளை கிணறுகள் தான் எங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

சுரங்கபாதையை எதிர்த்து என்.ஜி.ஜி.ஓ. காலனி, சிங்காரப்பேட்டை, கந்தசாமிபுதூர், வ.உ.சி.நகர், தாதம்பட்டி காலனி பகுதி மக்கள் கடந்த 6 மாதங்களாக போராடி வருகிறார்கள். இதுபற்றி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். எனவே, சேலம்-விருத்தாசலம் ரெயில்வே பாதையில் தாதம்பட்டி பகுதியில் சுரங்கபாதை அமைக்காமல், ஆளுள்ள ரெயில்வே கேட் அமைத்து கொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வருகிற 15-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story