மின் கட்டண உயர்வால் மக்களுக்கு சுமை ஏற்படாது முதல்-மந்திரி குமாரசாமி சொல்கிறார்


மின் கட்டண உயர்வால் மக்களுக்கு சுமை ஏற்படாது முதல்-மந்திரி குமாரசாமி சொல்கிறார்
x
தினத்தந்தி 6 July 2018 10:15 PM GMT (Updated: 6 July 2018 10:09 PM GMT)

மின் கட்டண உயர்வால் மக்களுக்கு சுமை ஏற்படாது என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு, 

மின் கட்டண உயர்வால் மக்களுக்கு சுமை ஏற்படாது என்று குமாரசாமி கூறினார்.

நியாயம் கிடைக்கவில்லை

முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன்ராம் நினைவு நாளையொட்டி பெங்களூரு விதான சவுதாவில் உள்ள அவருடைய உருவ சிலைக்கு அடியில் வைக்கப்பட்டு இருந்த உருவ படத்திற்கு குமாரசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பட்ஜெட்டில் எந்த மாவட்டங்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது, எந்த சமூகங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சட்டசபையில் சொல்லட்டும். அதற்கு உரிய பதிலை வழங்க நான் தயாராக இருக்கிறேன். அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே நான் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளேன்.

சட்டசபையில் பதில்

நான் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டை தேவை இல்லாமல் குறை சொல்கிறார்கள். மண்டியா, ராமநகர், ஹாசன் ஆகிய மாவட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியதாக சொல்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் அந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது தெரியுமா?. உறுப்பினர்கள் எழுப்பும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சட்டசபையில் பதில் அளிப்பேன்.

வட கர்நாடகத்தில் உள்ள மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறேன். நிலைமை இவ்வாறு இருக்கும்போது வடகர்நாடகத்தை நான் புறக்கணித்துவிட்டதாக விமர்சிப்பது சரியா?. சித்தராமையா தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் கடலோர மாவட்டங்களுக்கு அறிவித்த திட்டங்கள் அமல்படுத்தப்படும். அந்த பகுதிக்கு நான் நிதியை குறைக்கவில்லை.

ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு

கார்வார் துறைமுகத்தின் மேம்பாட்டிற்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறேன். மங்களூரு துறைமுகத்திற்கு ரூ.50 கோடி, மீனவர்களின் வளர்ச்சிக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நான் தாக்கல் செய்த பட்ஜெட்டை சரியாக புரிந்துகொள்ளாமல் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்துகிறார்கள். மின் கட்டண உயர்வால் பெரிய அளவில் மக்களுக்கு சுமை ஏற்படாது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story