திருமண பத்திரிகையில் பெயர் போடாததால் இருதரப்பினர் இடையே மோதல்; போலீசார் வழக்குப்பதிவு


திருமண பத்திரிகையில் பெயர் போடாததால் இருதரப்பினர் இடையே மோதல்; போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 6 July 2018 10:00 PM GMT (Updated: 7 July 2018 12:06 AM GMT)

கூத்தாநல்லூர் அருகே திருமண பத்திரிகையில் பெயர் போடாததால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தந்தை-மகன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.போலீஸ்சார் வழக்குப்பதிவு செய்தனர்.

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே உள்ள கிளியனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கனகவேல் (வயது 27). விவசாயி. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமண பத்திரிகையில் இவருடைய உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த அண்ணன்- தம்பிகளான அய்யப்பன் (25), விஜயகுமார்(22), வினோத் குமார் (20) ஆகிய 3 பேரின் பெயரையும் கனகவேல் போடவில்லை. இதனால் கனகவேல் மீது அய்யப்பன், விஜயகுமார், வினோத்குமார் ஆகிய 3 பேரும் கோபத்தில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் அய்யப்பன், விஜயகுமார், வினோத்குமார் ஆகியோரின் தாயார் நீலாவதி, கனகவேல் வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டு இருந்தார். இதனைப்பார்த்த 3 பேரும் சேர்ந்து நம்மை மதிக்காதவன் வீட்டில் எதற்காக வந்து பேசிக்கொண்டு இருக்கிறாய் என்று நீலாவதியை திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கனகவேல் மற்றும் அவருடைய தந்தை ராதா ஆகிய 2 பேரும், அவர்களை தட்டிக்கேட்டனர். இதையடுத்து இருதரப்பினரும் மோதி கொண்டனர். இதனால் ஒருவரை ஒருவர் அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கிக்கொண்டனர்.

இதில் படுகாயம் அடைந்த கனகவேல் மற்றும் அவரது தந்தை ராதா 2 பேரும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், அய்யப்பன், விஜயகுமார், வினோத்குமார் ஆகிய 3 பேரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வடபாதிமங்கலம் போலீசில் கனகவேல் மற்றும் வினோத்குமார் தனித்தனியே புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story