கடலூர் முதுநகர் அருகே சம்பளபாக்கி கேட்ட கொத்தனாருக்கு சரமாரி கத்திக்குத்து


கடலூர் முதுநகர் அருகே சம்பளபாக்கி கேட்ட கொத்தனாருக்கு சரமாரி கத்திக்குத்து
x
தினத்தந்தி 8 July 2018 11:45 PM GMT (Updated: 8 July 2018 10:15 PM GMT)

கடலூர் முதுநகர் அருகே சம்பள பாக்கி கேட்ட கொத்தனாரை சரமாரியாக கத்தியால் குத்திய தச்சு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே உள்ள சின்னகாரைக்காடு முருகன்கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 37). இவர் கடலூர் தேவனாம்பட்டினத்தில் தச்சு வேலை செய்து வருகிறார். இவர் சின்ன காரைக்காடு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த கொத்தனார் சாரங்கன் (45) என்பவரை வேலைக்காக அழைத்து சென்றார்.

வேலை முடிந்த பின்னர் சாரங்கனுக்கு வழங்க வேண்டிய கூலியில் ரூ.300-ஐ பன்னீர்செல்வம் பாக்கி வைத்திருந்தார். இந்த பணத்தை அவர் பல முறை கேட்டுப்பார்த்தும் பன்னீர்செல்வம் காலம் கடத்தி வந்ததாக கூறப்படு கிறது.

சம்பவத்தன்று சாரங்கன் பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்று அவரிடம் சம்பளபாக்கியை தரும்படி கேட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பன்னீர்செல்வம் தன்னிடம் இருந்த கத்தியால் சாரங்கனை சரமாரியாக குத்தினார். இதில் அவரது இடது கழுத்து, முதுகு, இடது முன்கை, விரல் போன்ற இடங்களில் கத்திகுத்து காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சாரங்கனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.

Next Story