ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 July 2018 10:15 PM GMT (Updated: 9 July 2018 8:25 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தரமற்ற முறையில் சாலை அமைக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை ஊராட்சியில் பந்தப்பாறை செல்லும் வழியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று திருவண்ணாமலையில் இருந்து பந்தப்பாறை வரை சுமார் 3½ கிலோ மீட்டர் வரை சாலை போடுவதற்கு நபார்டு நிதியில் இருந்து ஒரு கோடியே 17 லட்சத்து 16 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. வருகிற 15–ந்தி சாலைப்பணிகள் முடக்கப்பட வேண்டும். இந்த நிலையில் தற்போது வரை 2¼ கிலோ மீட்டர் வரை தான் சாலை போடப்பட்டுள்ளது.

போடப்பட்ட சாலையும் தரமானதாக இல்லை. பல இடங்களில் சாலை உயரம், அகலம் குறைவாக உள்ளது. சில இடங்களில் அகலம் குறைக்கப்பட்டதை சரி செய்வதற்கு மணலை போட்டு மூடி உள்ளனர்.

மேலும் சாலைப் பணிகள் முடிவடைவதற்கு முன்னரே ஒன்றிய பொறியாளர் சாலையை அளவிடும் பணியை முடித்துவிட்டு பணம் விடுவிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கி விட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இங்கு சாலை வந்தால் எங்களுக்கு பிரச்சினைகள் தீரும் என நினைத்து சாலைக்கு எங்களில் சிலர் சொந்தமான இடங்களை விட்டு கொடுத்தோம். ஆனால் இப்போது சாலையைப் பார்த்தால் பழைய மாதிரியே இருந்து இருக்கலாம் என எங்களுக்கு தோன்றுகிறது. அரசு ஒதுக்கிய நிதியில் கால் பங்கு கூட செலவழிக்கப்பட வில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கர்ணன், முனியசாமி ஆகியோர் கூறுகையில், எங்களது நலனுக்காக சாலை போடப்படுகிற மகிழ்ச்சியில் எங்களின் நிலங்களை கொடுத்தோம். ஆனால் சாலை தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாலையை தரமானதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story