டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் உடைந்த கண்ணாடி துண்டு


டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் உடைந்த கண்ணாடி துண்டு
x
தினத்தந்தி 9 July 2018 11:45 PM GMT (Updated: 9 July 2018 10:07 PM GMT)

சென்னிமலை அருகே டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் உடைந்த கண்ணாடி துண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னிமலை, 

சென்னிமலை மேற்கு ராஜவீதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் நேற்று முன்தினம் இரவு சென்னிமலை அருகே அறச்சலூர் ரோட்டில் தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். பின்னர் அந்த கடையில் ஒரு குவார்ட்டர் மது பாட்டில் வாங்கினார். இதையடுத்து அருகில் உள்ள பாருக்கு சென்று அங்கு பாட்டிலை திறந்து மது குடிக்க தொடங்கினார். சிறிது குடித்ததும் அந்த பாட்டிலின் உள்ளே உடைந்த சிறிய கண்ணாடி துண்டு கிடந்ததை கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் அந்த கண்ணாடி துண்டை பாட்டிலில் இருந்து எடுக்க முயன்றார். ஆனால் அந்த துண்டு பாட்டிலின் வாய் பகுதியை விட பெரிதாக இருந்ததால் வெளியே எடுக்க முடியவில்லை. எனினும் அந்த கண்ணாடி துண்டின் சிறிய துகள் தனது வயிற்றுக்குள் போய் இருக்குமோ? என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் வாந்தி எடுத்தார்.

இதுகுறித்து டாஸ்மாக் கடைக்கு வந்த மது பிரியர்கள் கூறுகையில், ‘தமிழ்செல்வன் வாங்கிய மது பாட்டிலில் உடைந்த கண்ணாடி துண்டை பார்த்ததும் எங்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. உடனே நாங்கள் வாங்கிய மது பாட்டிலிலும் கண்ணாடி துண்டு இருக்கிறதா? என பதற்றத்துடன் உற்று பார்க்க தொடங்கினோம். ஆனால் நாங்கள் வாங்கிய பாட்டிலில் கண்ணாடி துண்டுகள் எதுவும் இல்லை. இதனால் நிம்மதி பெருமூச்சு விட்டோம். மேலும் தமிழ்செல்வன் வாங்கிய பாட்டிலில் இருந்த கண்ணாடி துண்டு பெரியது. பாட்டிலின் வாய் வழியே எடுக்க முடியவில்லை.

எனவே மது தயாரிக்கப்படும்போதே பாட்டிலின் உள்ளேயே கண்ணாடி துண்டு இருந்திருக்கும். சிறிய கண்ணாடி துண்டாக இருந்தால் அது வயிற்றுக்குள் சென்று குடலை கிழிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும். எனவே டாஸ்மாக் அதிகாரிகள் மதுபான ஆலையில் இருந்து மது பாட்டில்களை வாங்கும்போது முறையாக ஆய்வு செய்து வாங்கி விற்பனை செய்ய வேண்டும்,’ என்றார். மது பாட்டிலின் உள்ளே உடைந்த கண்ணாடி துண்டு கிடந்த சம்பவத்தால் சென்னிமலை அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story