ஊழல் நிறைந்த தமிழக அரசை கலைக்க ஏன் முன்வரவில்லை மத்திய அரசுக்கு டி.டி.வி.தினகரன் கேள்வி


ஊழல் நிறைந்த தமிழக அரசை கலைக்க ஏன் முன்வரவில்லை மத்திய அரசுக்கு டி.டி.வி.தினகரன் கேள்வி
x
தினத்தந்தி 10 July 2018 11:00 PM GMT (Updated: 10 July 2018 7:35 PM GMT)

ஊழல் நிறைந்த தமிழக அரசை கலைக்க ஏன் முன்வரவில்லை என மத்திய அரசுக்கு எதிராக டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாத்தூர்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சாத்தூர் வழியாக சென்றார். சாத்தூரில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நிருபர்களிடம் தினகரன் கூறியதாவது:–

நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்பது போகாத ஊருக்கு வழிசொல்வது போல் உள்ளது. லோக் ஆயுக்தா சட்டபூர்வமாக அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரே அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஊழல் மற்றும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத அரசை கலைக்க மத்திய அரசு ஏன் முன்வரவில்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையும் தமிழக அரசும் சேர்ந்து கபட நாடகம் ஆடுவதாக வைகோ சொன்ன கருத்தில் உண்மை இருக்க வாய்ப்புள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடுவதற்கு முன் உளவுத்துறை என்ன செய்தது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு சத்துணவு முட்டை வழங்கும் நிறுவனத்தில் 5 நாட்கள் வருமாவனவரி துறையினர் நடத்திய சோதனையில் சிக்கிய ஆவணங்களில் முக்கிய அரசியல் வாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் தற்போது நடைபெற்ற முட்டை ஊழலை வைத்து தான் பா.ஜனதா தலைவர் அமித்ஷா தமிழகத்தில் ஊழல் உள்ளதாக கூறி இருக்கிறார். தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story