சிதம்பரம் அருகே கொத்தனார் அரிவாளால் வெட்டிக்கொலை


சிதம்பரம் அருகே கொத்தனார் அரிவாளால் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 10 July 2018 10:15 PM GMT (Updated: 10 July 2018 10:18 PM GMT)

சிதம்பரம் அருகே கொத்தனார் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

சேத்தியாத்தோப்பு,

குடிபோதையில் நண்பரே கொலை செய்த இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அக்ரமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பாலமுருகன்(வயது 30), கொத்தனார். அதே பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சமையல் தொழிலாளியான சுந்தரமூர்த்தி(28). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர்.

இந்த நிலையில் நேற்று மதியம் பாலமுருகனும், சுந்தரமூர்த்தியும் ஊர் எல்லையில் உள்ள கொட்டகையில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி அருகில் இருந்த அரிவாளால், பாலமுருகனின் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஒரத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 
 
பின்னர் பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கொலை செய்த சுந்தரமூர்த்தி ஒரத்தூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று, அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் கொத்தனாரை அவரது நண்பரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story