வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 11 பவுன் நகை பறிப்பு


வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 11 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 11 July 2018 10:35 PM GMT (Updated: 11 July 2018 10:35 PM GMT)

அம்பத்தூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 11 பவுன் நகையை மர்மநபர் பறித்துச்சென்றார்.

அம்பத்தூர்,


சென்னை அம்பத்தூர் ஞானமூர்த்தி நகர் சண்முகமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமரன் (வயது 34). இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கற்பகம் பிருந்தா(28).

நேற்று முன்தினம் மதியம் இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரது வீட்டுக்கு வந்தார். சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் இருந்து வருகிறேன். வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்.


அதை நம்பிய கற்பகம் பிருந்தா, அவரை வீட்டுக்குள் அனுமதித்தார். பின்னர் மாடிக்கு சென்று பார்த்து விட்டு கீழே இறங்கி வந்த வாலிபர், திடீரென கத்தியை காட்டி மிரட்டி கற்பகம் பிருந்தா அணிந்து இருந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு, வீட்டின் வெளியே மோட்டார் சைக்கிளுடன் காத்து இருந்த தனது கூட்டாளியுடன் தப்பிச்சென்று விட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


* நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரம்யா (22) தனது வீட்டின் குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

* சென்னை கோட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மின்சார ரெயில் மோதி உயிரிழந்தார்.

* கொலை வழக்கில் தொடர்புடைய காசிமேட்டை சேர்ந்த வனிதா (40) என்பவர் உள்பட 7 பேரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

* பட்டாபிராம் பகுதியில் சாலையில் சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற பட்டாபிராமை அடுத்த ஆயில்சேரி பகுதியை சேர்ந்த ரெட்டைமலை சீனிவாசன் (20) கைது செய்யப்பட்டார்.

* எண்ணூர் விரைவு சாலையை கடக்க முயன்ற திருவொற்றியூர் ஒண்டிக்குப்பத்தை சேர்ந்த மீனவர் பாலசுந்தரம் (60) மோட்டார்சைக்கிள் மோதி பலியானார். இதுதொடர்பாக பிரகாஷ் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story