திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 3 மாதமாக சம்பளம் கிடைக்காமல் தூய்மை காவலர்கள் தவிப்பு


திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 3 மாதமாக சம்பளம் கிடைக்காமல் தூய்மை காவலர்கள் தவிப்பு
x
தினத்தந்தி 18 July 2018 10:14 PM GMT (Updated: 18 July 2018 10:14 PM GMT)

திருப்பரங்குன்றம் ஊராட்சியில் 3 மாதமாக சம்பளம் கிடைக்காமல் தூய்மை காவலர்கள் பரிதவித்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம்,


தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் தூய்மை காவலர்களாக மகளிர் குழுக்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் சராசரி 35 பேர் தெருத்தெருவாக சென்று வீடுகளில் சேரும் குப்பைகளை வாங்கி சேகரித்து குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இந்த நிலையில் அந்த குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் என்று தரம் பிரித்து உரம் தயாரிப்பதில் சில ஊராட்சிகள் செயல்பட்டு வருகிறது.

தெருத்தெருவாக குப்பை வண்டிகள் மூலம் குப்பைகளை சேகரித்து வந்ததையொட்டி ஊராட்சிகள் முழுவதும் சுகாதாரமாக இருந்து வந்தது. இதனையொட்டி தூய்மை காவலர்களுக்கு தினமும் தலா ரூ.200 சம்பளம் வழங்கப்பட்டது. அதன்படி மாதம் முழுவதுமாக ரூ.6 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது மாதந் தோறும் ரூ.2 ஆயிரத்து 500 என சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பணியிலும், தூய்மை காவலர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பணி சுமையை கருத்தில் கொண்டு பல ஊராட்சிகளில் தூய்மை காவலர்கள் பணிக்கு வருவதில்லை. இதனால் தற்போது பணிக்கு வரக்கூடிய தூய்மை காவலர்கள் பணிச்சுமையில் தவிக்கின்றனர்.

இவ்வித பாதிப்பால் ஊராட்சிகளில் உள்ள தெருக்களில் குப்பைகள் சேர்ந்து, சுகாதாரம் கேள்வி குறியாகிறது. திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள பல ஊராட்சிகளில் பலருக்கு 3 மாதத்திற்கு மேலாக சம்பளம் வரவில்லை என்று தூய்மை காவலர்கள் கவலையுடன் கூறுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது உயர் அதிகாரிகள் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சம்பளம் வந்துவிடும் என்றனர்.

Next Story