ரூ.3,517 கோடியில் நான்கு வழிச்சாலை: நிலம் கையகப்படுத்தப்பட்ட இடத்தை சமன்படுத்தும் பணிகள் தீவிரம்


ரூ.3,517 கோடியில் நான்கு வழிச்சாலை: நிலம் கையகப்படுத்தப்பட்ட இடத்தை சமன்படுத்தும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 19 July 2018 11:00 PM GMT (Updated: 19 July 2018 8:45 PM GMT)

தஞ்சை-விக்ரவாண்டி இடையே 4 வழிச்சாலை பணிகள் ரூ.3 ஆயிரத்து 517 கோடியில் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட இடத்தை சமன்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சாலை பணிகளை 2020-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் மொத்தம் தேசிய நெடுஞ்சாலைகள் மட்டும் 4 ஆயிரத்து 873 கி.மீ. நீளமும், மாநில நெடுஞ்சாலைகள் 10 ஆயிரத்து 549 கி.மீ. நீளமும் உள்ளன. இது தவிர மாவட்ட முதன்மை சாலைகள் 11 ஆயிரத்து 315 கி.மீ. நீளமும், இதர சாலைகள் 34 ஆயிரத்து 937 கி.மீ. நீளமும், உள்ளாட்சி சாலைகள் 90 ஆயிரத்து 509 கி.மீ. நீளமும் உள்ளன.

தஞ்சை-கும்பகோணம்-விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி வரையிலான சாலைகள் குறுகலாகவும், சாலையின் ஓரங்களில் குடியிருப்புகளும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட நேரம் பயணமாகும் நிலை ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக தஞ்சையில் இருந்து கும்பகோணத்திற்கு செல்வதற்கு(50 கிலோ மீட்டர் தூரம்) 1½ மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஆகிறது. மேலும் இந்த சாலைகளும் மோசமான நிலையில் உள்ளன.

இதனை கருத்தில் கொண்டு தஞ்சையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி வரையிலான 165 கிலோ மீட்டர் தூரம் நீளமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 4 வழி சாலைகளாக கடந்த 2006-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. மேலும் இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து 2010-ம் ஆண்டில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு தஞ்சை-விக்ரவாண்டி சாலையையும் வழியில் உள்ள பாலங்களையும் புதிதாக அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாலும், நேரம் வீணாகுவதை கருத்தில் கொண்டு விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையிலும் மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3,517 கோடி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து தஞ்சையில் இருந்து விக்ரவாண்டி வரையில் 4 வழிச்சாலைகள் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. தற்போது வரை 90 சதவீதத்துக்கும் மேல் நிலம் கையகப் படுத்தும் பணிகள் நிறைவடைந்து விட்டன. மீதமுள்ள பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

நிலம் கையகப்படுத்தப்பட்டதையடுத்து சாலை அமைக்கும் பணிகளும் தொடங்கி உள்ளன. இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் 3 பிரிவுகளாக பிரித்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் விக்ரவாண்டி-சேத்தியாத்தோப்பு வரை ஒரு பிரிவாகவும், சேத்தியாத்தோப்பில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரை 2-வது பிரிவாகவும், சோழபுரத்தில் இருந்து தஞ்சை மாரியம்மன்கோவில் பைபாஸ் சாலை வரை 3-வது பிரிவாகவும் பணிகளை ஒதுக்கியது.

இதில் முதல் பிரிவான விக்ரவாண்டி-சேத்தியாத்தோப்பு வரை ரூ.711 கோடி மதிப்பீட்டில் 66 கி.மீ நீளத்தில் சாலை அமைக்கும் பணியில் கெடிலம், தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளின் மேல் 26 ஆற்றுப்பாலங்களும், 27 சாலை மேம்பாலங்களும், 3 ரெயில்வே மேம்பாலங்களும், 2 கனரக வாகன நிறுத்துமிடங்களும், பண்ருட்டி, வடலூர் ஆகிய பகுதிகளில் 2 புறவழிச்சாலைகளும், 1 சுங்கச்சாவடியும் அமைக்கப்பட உள்ளன.

2-வது பிரிவான சேத்தியாத்தோப்பு முதல் கும்பகோணம் தாராசுரம் வரை ரூ.1,461 கோடியில் 50.275 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பின்னலூர், சேத்தியாத்தோப்பு, அணைக்கரை, திருப்பனந்தாள் என 16 கி.மீ. நீளத்துக்கு புறவழிச்சாலைகளும், ரூ.100 கோடியில் அணைக்கரை பாலம் உள்பட 34 ஆற்றுப்பாலங்களும், ஜெயங்கொண்டம் கூட்டுரோடு, மீன்சுருட்டி, குமாரக்குடி, சோழகத்தரம் உள்ளிட பகுதிகளில் 23 மேம்பாலங்களும், ஒரு சுங்கச்சாவடியும் அமைக்கப்பட உள்ளன.

3-ம் பகுதியான தாராசுரம் முதல் தஞ்சை மாரியம்மன்கோவில் புளியந்தோப்பு வரை ரூ.1,345 கோடி மதிப்பீட்டில் 48 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படுகிறது. இதில் கும்பகோணத்தில் உள்ள காவிரி ஆறு, வடவாறு ஆகிய ஆறுகள் உள்பட 62 இடங் களில் ஆற்றுப்பாலங்களும், தாராசுரம் பகுதியில் 1 ரெயில்வே மேம்பாலமும், வளையப்பேட்டை ராஜகிரி, திருக் கருக்காவூர் ஆகிய இடங்களில் 20 சாலை மேம்பாலங்களும், 1 சுங்கச்சாவடியும் அமைக்கப்பட உள்ளன.

சுமார் 150 அடி அகலத்திற்கு 4 வழிச்சாலைகள் அமைப்பதற்காக தற்போது 180 அடிக்கு அகலமாக(60 மீட்டர்) மண் சாலைகள் அமைக்கும் பணிகள் அனைத்து பகுதிகளிலும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சையை அடுத்த சமுத்திரம் ஏரி தொடங்கும் இடத்தில் இருந்து சோழபுரம் வரையிலான சாலை அமைக்கும் பணிக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் சமப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

Next Story