செல்போன் திருடியதாக போலீசில் புகார்: 2 மகள்களுடன் பெண் தற்கொலை முயற்சி


செல்போன் திருடியதாக போலீசில் புகார்: 2 மகள்களுடன் பெண் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 20 July 2018 11:06 PM GMT (Updated: 20 July 2018 11:06 PM GMT)

செல்போனை திருடியதாக போலீசில் புகார் செய்ததால் மனம் உடைந்த பெண், தனது 2 மகள்களுடன் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரில் வசித்து வருபவர் பரத்லால் (வயது 45). பானிபூரி கடை வைத்து உள்ளார். டெல்லியை சேர்ந்த இவருடைய மனைவி ராக்கி (38). இவர்களுக்கு ஜமுனா (20), மோனிசா (18) என 2 மகள்கள் உள்ளனர்.

இவர்கள் குடியிருந்து வரும் வீட்டின் மாடியில் சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வரும் அன்னசுந்தரி (35) என்பவர் தனது தாய் தங்கமணி (65) மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.

அன்னசுந்தரி வீடுகட்ட வேண்டும் என்று கூறி பரத்லாலிடம் இருந்து ரூ.1 லட்சம் கடன் பெற்று உள்ளதாக தெரிகிறது. தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி பரத்லால் கேட்டார். ஆனால் பணத்தை கொடுக்காமல் அன்னசுந்தரி இழுத்தடித்து வந்ததால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

தற்கொலை முயற்சி

இந்த நிலையில் பரத்லாலின் இளைய மகள் மோனிசா தனது செல்போனை திருடி விட்டதாகவும், அதை தட்டிக்கேட்ட தனது தாய் தங்கமணியை பரத்லால் தாக்கியதாகவும் சாத்தாங்காடு போலீசில் அன்னசுந்தரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பரத்லாலை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதனால் மனமுடைந்த பரத்லாலின் மனைவி ராக்கி, தனது மகள்கள் ஜமுனா, மோனிசா ஆகியோருடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக 3 பேரும் சேர்ந்து வீட்டில் இருந்த மாத்திரைகளை எடுத்து அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு மயங்கி கிடந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

இதற்கிடையில் விசாரணைக்காக போலீஸ் நிலையம் சென்று விட்டு வீடு திரும்பிய பரத்லால், வீட்டின் உள்ளே தனது மனைவி மற்றும் மகள்கள் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story