நீர்வரத்து குறைந்தது: ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 25-வது நாளாக தடை


நீர்வரத்து குறைந்தது: ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 25-வது நாளாக தடை
x
தினத்தந்தி 2 Aug 2018 10:45 PM GMT (Updated: 2 Aug 2018 8:14 PM GMT)

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக குறைந்த போதிலும் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 25-வது நாளாக தடை நீடிக்கிறது.

பென்னாகரம்,

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலான கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் மழை அளவு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் குறைந்து மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக சரிவடைந்தது. நீர்வரத்து குறைந்த போதிலும் காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்யவும், அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நேற்று 25-வது நாளாக நீடித்தது.

இதனிடையே இன்று (வெள்ளிக்கிழமை) ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை நுழைவுவாயில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு விழா என்பதால் சுற்றுலா பயணிகள், புதுமண தம்பதிகள் காவிரி ஆற்றில் குளிப்பதை தடுக்க போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே கபினி அணையில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று ஒகேனக்கல்லை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

Next Story