ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 5 Aug 2018 10:30 PM GMT (Updated: 5 Aug 2018 9:49 PM GMT)

ஆடி கிருத்திகையையொட்டி திருச்சியில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி,

ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு உகந்ததாகும். ஆடி கிருத்திகையில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். மேலும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் ஆடி கிருத்திகையையொட்டி திருச்சியில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

திருச்சி மேலபுலிவார்டு மட்டக்கார தெருவில் உள்ள சிவசுப்ரமணிய சாமி கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. காவிரி ஆற்றில் திருமஞ்சனப் படித்துறையில் இருந்து பக்தர்கள் 108 பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர் ஒருவர் உடலில் பழ வகைகள் மற்றும் பூஜை பொருட்களை அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

கோவிலில் மாலை 6 மணி அளவில் நாதஸ்வர இன்னிசையுடன் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சாமி திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் வயலூர் முருகன் கோவில், ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவில், அய்யப்ப நகர் முருகன் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களிலும், பிற கோவில்களில் அமைந்துள்ள தனி சன்னதிகளிலும் முருக னுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

Next Story