பெரம்பலூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்


பெரம்பலூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 7 Aug 2018 10:45 PM GMT (Updated: 7 Aug 2018 7:41 PM GMT)

பெரம்பலூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

ஆட்டோ தொழிலாளர் களின் உரிமைகளையும், பொதுமக்களின் நலனுக்கு எதிராக 63 சரத்துக்களை கொண்ட சாலை பாதுகாப்பு விதிமுறைகள் சட்டத்திருத்த மசோதாவை கைவிட வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தின்படி 1992-க்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஷேர் ஆட்டோக்களை இயக்க கூடாது. உரிய காலத்திற்குள் தகுதி சான்றிதழ் பெறாவிட்டால் 5 மடங்கு அபராதம் விதிப்பது. மக்களுக்கு சேவையாக இருந்து வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக செயல்பாடுகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பிரித்துக்கொடுப்பதை கைவிட வலியுறுத்தியும், ஆட்டோக் களுக்கு விதிக்கப்படும் காப்பீடு பிரிமிய தொகையை உயர்த்தியதை கைவிட்டு பிரிமியம் செலுத்தும் தொகையை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரம்பலூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பெரம்பலூர் நகரில் 400-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டதால் சாலைகளில் அதிக வாகன போக்குவரத்தின்றி காணப்பட்டது. மினி பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் 3 பிளஸ் 1 பயணிகள் ஆட்டோ, ரிக்‌ஷா மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் வழக்கம் போல் தங்களது ஆட்டோக்களை இயக்கினர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் புதிய பஸ்நிலையத்தில் சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரம்பலூரில் ஷேர் ஆட்டோக்கள் வேலைநிறுத்தம் காரணமாக பழைய பஸ்நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

சாலைபாதுகாப்பு விதி முறைகள் சட்டத்திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன. இது தவிர மெக்கானிக், உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. வேலைநிறுத்தத்திற்கு இடையே நேற்று காலை காமராஜர் வளைவு சிக்னல் பகுதியில் மெக்கானிக் தொழிலாளர்கள் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story