கருணாநிதி மறைவால் சோகத்தில் மூழ்கிய திருக்குவளை


கருணாநிதி மறைவால் சோகத்தில் மூழ்கிய திருக்குவளை
x
தினத்தந்தி 7 Aug 2018 11:00 PM GMT (Updated: 7 Aug 2018 8:17 PM GMT)

கருணாநிதி மறைவையொட்டி அவர் பிறந்த ஊரான திருக்குவளை கிராமம் சோகத்தில் மூழ்கியது.

வேளாங்கண்ணி,

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை ஆகும். இந்த ஊரில் அஞ்சுகம்-முத்துவேலர் தம்பதியருக்கு கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி கருணாநிதி பிறந்தார். தற்போது திருக்குவளையில் கருணாநிதியின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் வசித்து வருகிறார்கள். நேற்று மாலை கருணாநிதி மரணம் அடைந்த தகவல் வெளியானதும் திருக்குவளை சோகத்தில் மூழ்கியது.

தங்கள் மண்ணில் பிறந்து, தங்கள் மண்ணுக்கு பெருமை சேர்த்த கருணாநிதி பிறந்த வீட்டுக்கு அந்த ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்து கருணாநிதியின் வீட்டு முன்பு நின்று கொண்டு அவரது உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சிலர் கருணாநிதியின் படத்தை கையில் ஏந்தி கண்ணீர் விட்டு கதறினர். பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர்.

திருக்குவளையில் உள்ள கருணாநிதியின் பிறந்த வீடு தற்போது நூலகமாக மாற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த நூலகத்தில் கருணாநிதியின் சிறு வயது முதல் முதுமை காலம் வரையிலான வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளன. கிராம மக்கள் அனைவரும் கருணாநிதி வீட்டுக்கு ஒன்று திரண்டு வந்ததால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மேலும் திருக்குவளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வெளியூர்களில் இருந்து திருக்குவளைக்கு வரும் பஸ்களும் நிறுத்தப்பட்டன. கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திருக்குவளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரங்கல் சுவரொட்டிகள் ஒட்டி இருந்தனர். இதேபோல் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் இரங்கல் தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை மெரினா கடற்கரையில் இடம் கேட்டு தி.மு.க.வினர் விடுத்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்காததால் திருக்குவளையில் கூடியிருந்த தி.மு.க.வினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் ஒன்று திரண்டு கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை மெரினா கடற்கரையில் இடம் தர வேண்டும் என கூறி கோஷம் எழுப்பினர். 

Next Story