திருப்பத்தூரில் குளத்துநீரை சுத்தப்படுத்தி விவசாயத்துக்கு பயன்படுத்த ஏற்பாடு


திருப்பத்தூரில் குளத்துநீரை சுத்தப்படுத்தி விவசாயத்துக்கு பயன்படுத்த ஏற்பாடு
x
தினத்தந்தி 10 Aug 2018 10:45 PM GMT (Updated: 10 Aug 2018 10:27 PM GMT)

திருப்பத்தூர் பேரூராட்சியின் மையப் பகுதியிலுள்ள குளத்து தண்ணீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் லதா தெரிவித்தார்.

சிவகங்கை,

திருப்பத்தூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகள் மேற்கொண்டு வருவதை கலெக்டர் லதாஆய்வு செய்தார். அவர் திருப்பத்தூர் 12-வது வார்டு பகுதியிலுள்ள வளம் மீட்பு வளாகத்திற்கு சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வரும் பணியை பார்வையிட்டார். பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று திட்டப்பணிகள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டார்.

பின்னர் கலெக்டர் லதா கூறியதாவது:-

திருப்பத்தூர் பேரூராட்சியில் நாள்தோறும் பயன்படுத்தப்பட்ட 2.5 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது. அதை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளிலிருந்து மண்புழு உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்காத குப்பைகளை துகளாக்கி பிளாஸ்டிக் சாலை அமைப்பதற்கான பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. தற்பொழுது கோழி கழிவு மற்றும் மீன் கழிவு சேகரிக்கப்பட்டு கிடங்கிற்கு கொண்டு வந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பேரூராட்சியின் மையப்பகுதியிலுள்ள குளத்தில் கழிவு நீர் கலந்துள்ளதையொட்டி அந்த தண்ணீரை சுத்தம் செய்திடும் வகையில் சுத்திகரிக்கும் மையம் அமைத்து அதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விவசாய பயன்பாட்டிற்காக மற்றொரு கண்மாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும்அங்குள்ள சுத்திகரிக்கும் மையத்தில் மீன்கள் வளர்க்கும் பணியும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

குடிநீர் தேவை மற்றும் தெருவிளக்கு அமைத்தல் போன்றவற்றிற்கு அதிக கவனம் செலுத்தி பொதுமக்களின் தேவைக்கேற்ப செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் பழுது கண்டறியப்பட்டால் உடனடியாக புதுப்பிக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

தற்பொழுது ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் பயன்படுத்தாத வண்ணம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்து ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பேரூராட்சி பகுதிகளில் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா, உதவி செயற்பொறியாளர் குமரகுரு, திருப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) சண்முகம், பேரூராட்சி தலைமை உதவியாளர் மங்களேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story