இரும்புச்சத்து மாத்திரையை சாப்பிட்ட மாணவி திடீர் சாவு


இரும்புச்சத்து மாத்திரையை சாப்பிட்ட மாணவி திடீர் சாவு
x
தினத்தந்தி 10 Aug 2018 11:10 PM GMT (Updated: 10 Aug 2018 11:10 PM GMT)

மும்பை மாநகராட்சி பள்ளியில் வழங்கப்பட்ட இரும்புச்சத்து மாத்திரையை சாப்பிட்ட மாணவி திடீரென உயிரிழந்தாள். 160 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

மும்பையில் மாநகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ரத்தசோகை குறைபாடு ஏற்படுவதை தடுப்பதற்காக மாநகராட்சியின் சுகாதாரத்துறை சார்பில் இரும்புச்சத்து மற்றும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கோவண்டி பைங்கன்வாடி சஞ்சய் நகரில் மாநகராட்சி உருது பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

சஞ்சய் நகர் உருது பள்ளிக்கும் இரும்புச்சத்து மற்றும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு இருந்தன.

கடந்த திங்கட்கிழமை அன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அந்த மாத்திரைகளை வழங்கினார்கள்.

அந்த மாத்திரையை சாப்பிட்ட சந்தினி சாஹில் சேக்(வயது12) என்ற மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவள் செவ்வாய்க்கிழமை அன்று பள்ளிக்கு செல்லவில்ைல. பின்னர் புதன்கிழமை மற்றும் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்திருந்தாள்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு மாணவி திடீரென ரத்தவாந்தி எடுத்து இருக்கிறாள். இதை பார்த்து அவளது குடும்பத்தினர் பதறி போனார்கள். அடுத்த சிறிது நேரத்தில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள். அவளது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளியில் வழங்கப்பட்ட இரும்புச்சத்து மாத்திரையை சாப்பிட்ட பின்னர் தான் அவள் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் நேற்று பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த சம்பவத்தால் அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பீதி அடைந்தனர். மேலும் பள்ளியில் மாணவ, மாணவிகள் சிலர் தங்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் வருவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து உடனடியாக அங்கு படிக்கும் 160 மாணவ, மாணவிகள் அருகில் உள்ள ராஜவாடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

ஆனால் அவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அனைவரும் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, மாணவி சந்தினி சாஹில் சேக் ‘டியூபர்குளோசிஸ்' எனப்படும் காசநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என மாநகராட்சி சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மத்திய அரசு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், குடற்புழுக்களை நீக்கவும் மாநகராட்சி இரும்புச்சத்து மாத்திரைகளை வழங்குகிறது.

இதன் காரணமாக இதுவரையிலும் எந்த ஒரு அசாதாரண சம்பவமும் நடைபெறவில்லை. மேற்படி 12 வயது மாணவி இறந்ததற்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் தெரியவரும்’’ என்றார். 

Next Story