ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: மேல்முறையீடு செய்வது குறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார்


ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: மேல்முறையீடு செய்வது குறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார்
x
தினத்தந்தி 11 Aug 2018 3:44 AM GMT (Updated: 11 Aug 2018 3:44 AM GMT)

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்வது குறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தூத்துக்குடி,

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்வது குறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய கட்டிடம்

தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடைமடை வரை குறுவை சாகுபடிக்கு தண்ணீர் செல்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 10-வது தாலுகாவாக ஏரல் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே கயத்தாறு தாலுகா அலுவலகத்துக்கு ரூ.2 கோடியே 27 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரம்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில், அரசின் நடவடிக்கையில் தலையிட முடியாது. மீண்டும் ஆலையை திறப்பதற்கான உத்தரவை வழங்க முடியாது. அங்கு நிர்வாக ரீதியான பணியை செய்து கொள்ளலாம் என்றுதான் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெளிவான உத்தரவை பிறப்பித்து உள்ளது.

நிர்வாக ரீதியான பணியை மேற்கொள்ள அனுமதி அளித்து இருப்பது தொடர்பாக மேல்முறையீடு செய்வது குறித்து சட்டரீதியாக ஆலோசனை செய்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார்.

சட்டசிக்கலை உருவாக்கியது யார்?

மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம் தருவதற்கு சட்ட சிக்கல் இருந்து வந்தது.

அதனை சுட்டிக்காட்டிய போது, ஒரு மணி நேரத்தில் அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது. இதனால் சட்டசிக்கலை உருவாக்கியவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Next Story