பந்தலூரில் கூட்டுறவு தொழிற்சாலை சார்பில் பச்சை தேயிலை பறிக்கும் எந்திரம், மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்பனை


பந்தலூரில் கூட்டுறவு தொழிற்சாலை சார்பில் பச்சை தேயிலை பறிக்கும் எந்திரம், மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்பனை
x
தினத்தந்தி 11 Aug 2018 10:45 PM GMT (Updated: 11 Aug 2018 7:41 PM GMT)

பந்தலூரில் கூட்டுறவு தொழிற்சாலை சார்பில் பச்சை தேயிலை பறிக்கும் எந்திரம் மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பந்தலூர்,

பந்தலூரில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பந்தலூர், கூவமூலா, கொளப்பள்ளி, ஏலமண்ணா, உப்பட்டி, நெல்லியாளம், அய்யன்கொல்லி, தட்டாம்பாறை, கோட்டப்பட்டி, முருக்கம்பாடி, மழுவன்சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 1,500 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தங்கள் தோட்டங்களில் பச்சை தேயிலையை பறித்து, தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர். ஆனால் பச்சை தேயிலை பறிக்க தொழிலாளர்கள் பற்றாக்குறையாமல், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பச்சை தேயிலை பறிக்கும் எந்திரத்தை நாள் ஒன்றுக்கு ரூ.250 என்ற வாடகை விலையில் கூட்டுறவு தொழிற்சாலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்கி வந்தது.

இந்த நிலையில் அதுபோன்ற எந்திரங்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா மற்றும் செயல்விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு கூட்டுறவு தொழிற்சாலை இணை இயக்குனர்(தேயிலை) ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். பின்னர் பச்சை தேயிலை பறிக்கும் எந்திர விற்பனையை தொடங்கி வைத்து அவர் பேசும்போது, கூட்டுறவு தொழிற்சாலை மூலம் பச்சை தேயிலை பறிக்கும் எந்திரத்தை மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு எந்திரம் குறைந்தது ரூ.30 ஆயிரம் விலை இருக்கும். தேவைப்படும் உறுப்பினர்கள் முன்பணமாக ரூ.10 ஆயிரத்தை தொழிற்சாலையில் செலுத்தி மானிய விலையில் எந்திரத்தை பெற்று கொள்ளலாம். இதன் மூலம் ஒரு நாளில் 10 ஆட்கள் பறிக்கும் பச்சை தேயிலையை 4 மணி நேரத்தில் பறித்துவிடலாம் என்றார்.


Next Story