பள்ளிபாளையத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; வியாபாரி கைது


பள்ளிபாளையத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; வியாபாரி கைது
x
தினத்தந்தி 25 Aug 2018 11:53 PM GMT (Updated: 25 Aug 2018 11:53 PM GMT)

பள்ளிபாளையத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வியாபாரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29), நூல் வியாபாரி. இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன.

இவர் அதே பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமியை கடந்த 3 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமிக்கு, தனது மனைவியின் தோடு, ஜிமிக்கி போன்றவற்றை மணிகண்டன் கொடுத்துள்ளார்.

இதனிடையே அந்த சிறுமியின் கழுத்தில் இருந்த தோடுகளை பார்த்து விட்டு, மணிகண்டனின் மனைவி, இந்த தோடு உனக்கு எப்படி கிடைத்தது? என்று விசாரித்துள்ளார். அப்போது அந்த சிறுமி, மணிகண்டன் தான் கொடுத்ததாக கூறி உள்ளார்.

மேலும் சிறுமியின் பெற்றோரும் இது தொடர்பாக விசாரிக்கவே, சிறுமி தன்னை மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்ததை கூறி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனே சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story