பாலத்தில் தடுப்பு கம்பிகள் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்


பாலத்தில் தடுப்பு கம்பிகள் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 26 Aug 2018 10:29 PM GMT (Updated: 26 Aug 2018 10:29 PM GMT)

கூடலூர் அருகே முல்லைப்பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைரவன் வாய்க்கால் பாலத்தின் இருபுறமும் தடுப்பு கம்பிகள் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கூடலூர், ஆக.27-



கூடலூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் கழுதைமேடு புலம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் விவசாயிகள் நிலக்கடலை, எள், தட்டைப்பயறு, அவரை, மொச்சை உள்பட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இவர்கள் கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் புதுரோடு பகுதி வரை பஸ்களில் வருகின்றனர். பின்னர் அங்கிருந்து முல்லைப்பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைரவன் வாய்க்கால் பாலம் வழியாக தங்கள் நிலங்களுக்கு நடந்து செல்கின்றனர்.

இந்த வைரவன் வாய்க்கால் பாலம் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அதன் பிறகு உரிய பராமரிப்பு இல்லாத நிலையில் பாலத்தில் இரும்பினால் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் அனைத்தும் சேதமடைந்து விழுந்து விட்டன. பாலத்தில் புதிய கம்பிகளை அமைக்கவேண்டும் என்று விவசாயிகள் பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் பொதுப்பணித்துறையினர் அதனை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் விளைப்பொருட்கள் மற்றும் கால்நடைகளுக்கான புல்லுகட்டுகளை சுமந்து கொண்டு இந்த பாலத்தின் வழியாக கடந்து செல்ல விவசாயிகள் மிகவும் அச்சப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் அந்த பாலத்தில் நடந்து வரும் போது விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் நிலை தடுமாறி வாய்க்காலில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே வைரவன் வாய்க்கால் பாலத்தில் புதிதாக தடுப்பு கம்பிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story