கிணற்றில் மூழ்கி இறந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரின் உடல் மீட்பு


கிணற்றில் மூழ்கி இறந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரின் உடல் மீட்பு
x
தினத்தந்தி 3 Sep 2018 10:15 PM GMT (Updated: 3 Sep 2018 9:20 PM GMT)

கிணற்றில் மூழ்கி இறந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரின் உடல் மீட்பு.

க.பரமத்தி,

சின்னதாராபுரம் அருகே உள்ள புஞ்சைகாளிக்குறிச்சியை சேர்ந்தவர் சேகர் மகன் அருண்குமார்(வயது 21). இவர் நாமக்கலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் புஞ்சைகாளிக்குறிச்சி பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் நேற்று நடைபெற இருந்த சிறப்பு வழிபாட்டையொட்டி ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து அருண்குமார் உள்பட சிலர் தீர்த்தக்குடம் எடுக்க சென்றனர். அவர்கள் தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் புஞ்சை காளிக் குறிச்சியை நோக்கி வந்தனர். அப்போது கோணவாய்க்கால் என்ற இடத்தில் தீர்த்தக்குடத்தை வைத்துவிட்டு அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றனர். அப்போது அருண் குமார் கிணற்றில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்த மற்றவர்கள் இதுகுறித்து சின்னதாராபுரம் போலீஸ் நிலையத்திற்கும், அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி அருண்குமாரின் உடலை தேடிப்பார்த்தனர். பின்னர் கிணற்றின் ஆழ்பகுதிக்கு சென்று உடலை எடுத்துவரும் மதுரையை சேர்ந்த நபர்களை கொண்டு அருண்குமாரின் உடல் நேற்று காலை மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story