திருமணத்துக்கு முந்தைய நாளில் மணப்பெண் மாயம் போலீசில் தாய் புகார்


திருமணத்துக்கு முந்தைய நாளில் மணப்பெண் மாயம் போலீசில் தாய் புகார்
x
தினத்தந்தி 6 Sep 2018 10:15 PM GMT (Updated: 6 Sep 2018 9:12 PM GMT)

திருமணத்துக்கு முந்தைய நாளில் தஞ்சையில் திடீரென மணப்பெண் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மானோஜிப்பட்டி அருள்பிரகாசம் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணையன். இவர் தஞ்சையில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பிரேமலதா (வயது 47). இவர் கும்பகோணத்தில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் பணியாற்றுகிறார். இவருக்கு செல்வராஜ் என்பவருடன் ஏற்கனவே திருமணமாகி ராகப்பிரியா (25) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். செல்வராஜ் இறந்ததையடுத்து கண்ணையனை பிரேமலதா 2-வதாக திருமணம் செய்துகொண்டார்.

ராகப்பிரியா எம்.எஸ்சி. பட்ட மேற்படிப்புடன் ஆராய்ச்சி படிப்பும் முடித்திருந்தார். இவருக்கு நேற்று விருத்தாசலத்தில், அந்தப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற இருந்தது. இதைத்தொடர்ந்து இருவீட்டாரும் திருமண பத்திரிக்கையை உறவினர்களுக்கு கொடுத்துவிட்டு திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை தான் அணிந்திருந்த 13 பவுன் நகையுடன் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்ற ராகப்பிரியா இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ராகப்பிரியாவின் நெருங்கிய தோழிகளிடம் விசாரித்தனர். ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து ராகப்பிரியாவின் தாயார் பிரேமலதா தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மணப்பெண் ராகப்பிரியாவை தீவிரமாக தேடிவருகின்றனர்.

திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் மாயமானது அவரது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story