விழுப்புரத்தில் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு


விழுப்புரத்தில் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 7 Sep 2018 9:45 PM GMT (Updated: 7 Sep 2018 11:28 PM GMT)

விழுப்புரத்தில் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பரிசு வழங்கினர்.

விழுப்புரம், 


சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையை விழுப்புரம் மாவட்டத்தில் அமல்படுத்தும் விதமாக காவல்துறை சார்பில் ‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் நகர காவல்துறையும், போக்குவரத்து காவல் துறையும் இணைந்து ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

நிகழ்ச்சியில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், பாலமுருகன், போலீஸ் நண்பர்கள் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு ‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

மேலும் விழுப்புரம் நகரில் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கும் மற்றும் ‘ஹெல்மெட்’ அணிந்தவாறு பின்னால் அமர்ந்து பயணம் செய்தவர்களுக்கும் போலீசார், பரிசு பொருளை வழங்கி ஊக்கப்படுத்தினார்கள். 

Next Story