நெல்லை அருகே வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்


நெல்லை அருகே வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்
x
தினத்தந்தி 8 Sep 2018 10:30 PM GMT (Updated: 8 Sep 2018 1:30 PM GMT)

நெல்லை அருகே ராமையன்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்.

நெல்லை,

நெல்லை அருகே ராமையன்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்

பாராளுமன்ற தேர்தலுக்காக புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கடந்த மாதம் பெங்களூரில் இருந்து கொண்டு வரப்பட்டு நெல்லையை அடுத்த ராமையன்பட்டி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த எந்திரங்களை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது–

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பை, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராதாபுரம், நாங்குநேரி ஆகிய 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நெல்லை, தென்காசி என 2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்துவதற்கு வசதியாக இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி பெங்களூர் பெல் நிறுவனத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்கப்பட்டன. 8 ஆயிரத்து 370 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 4 ஆயிரத்து 540 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 4 ஆயிரத்து 550 வாக்குப்பதிவு சரிபார்க்கும் எந்திரங்கள் கடந்த மாதம் வந்தது.

சரிபார்க்கும் பணி

இந்த எந்திரங்களை முதல் நிலை சரிபார்க்கும் பணி சமீபத்தில் நடந்தது. பெங்களூரில் இருந்து 10 முதல் 25 என்ஜினீயர்கள் வந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்தனர். சரிபார்த்த எந்திரங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. இதில் 5 சதவீத மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் ஆணைய விதிமுறைக்கு உட்பட்டு மாதிரி தேர்தல் நடத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த எந்திரங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு மாதிரி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தற்போது போலி வாக்குச்சீட்டு பொருத்தப்பட்டு உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சாந்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story