ஹாவேரி அருகே வினோதம் : பசுமாட்டுக்கு வளைகாப்பு நடத்திய விவசாயி


ஹாவேரி அருகே வினோதம் : பசுமாட்டுக்கு வளைகாப்பு நடத்திய விவசாயி
x
தினத்தந்தி 8 Sep 2018 10:15 PM GMT (Updated: 8 Sep 2018 10:15 PM GMT)

ஹாவேரி அருகே தான் பாசமாக வளர்க்கும் ஒரு பசுமாட்டுக்கு விவசாயி ஒருவர் வளைகாப்பு நடத்தினார்.

ஹாவேரி,

கர்ப்பிணிகளுக்கு சீமந்தம் என்னும் வளைகாப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்லாரியில் 2 வளர்ப்பு நாய்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தான் பாசமாக வளர்க்கும் ஒரு பசுமாட்டுக்கு, விவசாயி ஒருவர்் வளைகாப்பு நடத்தியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ஹாவேரி மாவட்டம் பேடகி தாலுகா சிக்கபானூரு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் கவுடா. விவசாயி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் தான் வளர்த்த பசுமாடு ஒன்றை இறைச்சிக்காக விற்பனை செய்ய முயன்றார்.

இதைப்பார்த்த ரமேஷ் கவுடா அந்த பசுமாட்டை விலைக்கு வாங்கினார். பின்னர், அந்த பசுமாட்டை அவர் பாசமாக வளர்த்து வந்தார். இந்த நிலையில், பசுமாடு சினை பிடித்தது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த ரமேஷ் கவுடா பசுமாட்டுக்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் ரமேஷ் கவுடா தனது பசுமாட்டுக்கு வளைகாப்பு நடத்தினார். முன்னதாக, பசுமாட்டை குளிப்பாட்டிய அவர், 2 கொம்புகளையும் அலங்கரித்தார். வண்ண துணிகளை பசுமாட்டின் உடலில் அவர் போர்த்தினார். மாலை அணிவித்து இருந்த பசுமாட்டுக்கு அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஆரத்தி எடுத்து திலகமிட்டு வளைகாப்பு நடத்தினார். பின்னர், பசுமாட்டுக்கு பிடித்த உணவுகள் மற்றும் தீவனங்கள் வழங்கப்பட்டன.

Next Story