நுகர்பொருள் வாணிபக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் தர்ணா


நுகர்பொருள் வாணிபக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 12 Sep 2018 9:45 PM GMT (Updated: 12 Sep 2018 6:11 PM GMT)

குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.6,500 வழங்கக்கோரி மன்னார்குடியில் நுகர்பொருள் வாணிபக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுந்தரக்கோட்டை,


ஓய்வு பெற்ற நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.6,500 வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பண பலன்களை விரைந்து வழங்க வேண்டும், காலதாமதமின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மன்னார்குடியில் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் புண்ணீஸ்வரன், கோவிந்தராஜன், கோதண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் முன்னாள் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் செல்வராஜ், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துரை.அருள்ராஜன், நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் நாகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

Next Story