மண்டியாவுக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது ‘சொந்த ஊருக்கு வா தங்கச்சி’ என நடிகை ரம்யாவுக்கு நூதன அழைப்பு


மண்டியாவுக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது ‘சொந்த ஊருக்கு வா தங்கச்சி’ என நடிகை ரம்யாவுக்கு நூதன அழைப்பு
x
தினத்தந்தி 12 Sep 2018 10:30 PM GMT (Updated: 12 Sep 2018 7:57 PM GMT)

நடிகை ரம்யாவுக்கு பா.ஜனதாவினர் பார்சலில் வெற்றிலை, பாக்கு, தேங்காய்-பழத்தை அனுப்பி, சொந்த ஊருக்கு வா தங்கச்சி என அவருக்கு நூதன முறையில் அழைப்பு விடுத்துள்ளனர்.

மண்டியா, 

நடிகை ரம்யா மண்டியாவுக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதனால் பா.ஜனதாவினர், அவருக்கு பார்சலில் வெற்றிலை, பாக்கு, தேங்காய்-பழத்தை அனுப்பி, சொந்த ஊருக்கு வா தங்கச்சி என அவருக்கு நூதன முறையில் அழைப்பு விடுத்துள்ளனர்.

நடிகை ரம்யா

கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்தவர் நடிகை ரம்யா. தமிழ், கன்னட மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர், தற்போது அகில இந்திய காங்கிரஸ் சமூக வலைதள பிரிவு தலைவியாக உள்ளார். அவர் சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வந்தார். மேலும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார். சமூக வலைதளத்தில், தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நடிகை ரம்யா, கர்நாடக சட்டசபை தேர்தலிலும், நகர உள்ளாட்சி தேர்தலிலும் வாக்களிக்கவில்லை.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அவர் பிரசாரமும் செய்யவில்லை. இதனால் பா.ஜனதா உள்ளிட்ட கட்சியினர் அவரை கடும் விமர்சனம் செய்தனர். மண்டியா மாவட்ட காங்கிரஸ் கட்சியினரும் அவருக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். நடிகை ரம்யா மண்டியாவுக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது.

ரம்யாவுக்கு பார்சல்

இந்த நிலையில், நேற்று மண்டியா மாவட்ட பா.ஜனதா கட்சியினர், ‘சொந்த ஊருக்கு வா தங்கச்சி’ என்று எழுதி, பூ, தேங்காய், குங்குமம், வளையல் உள்ளிட்ட பூஜை பொருட்களை பார்சலில் வைத்து பெங்களூருவில் உள்ள நடிகை ரம்யாவின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘மண்டியா மாவட்டத்தை சேர்ந்த நடிகை ரம்யா, காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவியாக உள்ளார். அவர் சமூக வலைதளங்களில் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக பிரசாரம் செய்கிறார். ஆனால், அவர் தேர்தலில் வாக்களிக்க விரும்புவதில்லை. மண்டியா மக்களால் முன்பு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தற்போது மண்டியா பக்கமே வருவதில்லை. அவர் சொந்த ஊருக்கு வருவதற்காக தான், ரம்யாவுக்கு பார்சல் அனுப்பி வைத்துள்ளோம்’ என்றனர்.

Next Story