வாகனங்களின் பதிவு 3 மடங்காக அதிகரிப்பு வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் பேட்டி


வாகனங்களின் பதிவு 3 மடங்காக அதிகரிப்பு வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் பேட்டி
x
தினத்தந்தி 12 Sep 2018 10:15 PM GMT (Updated: 12 Sep 2018 9:16 PM GMT)

கோவை மாவட்டத்தில் வாகனங்களின் பதிவு 3 மடங்காக அதிகரித்து இருப்பதாகவும், ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் புதிய நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

கோவை,

வட்டார போக்குவரத்து கழக கோவை கோட்ட இணை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தினத்தந்தி நிருபருக்கு பேட்டி அளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- கோவை மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யப் பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

பதில்:- அரசு மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை - 9518, போக்குவரத்து அல்லாத வாகனங்களின் எண்ணிக்கை

நான்கு சக்கர வாகனம் - 1,11,228

இரு சக்கர வாகனம் - 5,12,068

டிராக்டர் உள்ளிட்ட இதர வாகனங்கள் - 37,379

கேள்வி:- கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் பதிவாகும் வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

பதில்:- மாதந்தோறும் சுமார் 4,300 வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது.

3 மடங்காக அதிகரிப்பு

கேள்வி:- 2010-ம் ஆண்டில்் பதிவான வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு?் 2018-ல் இதுவரை பதிவான வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

பதில்:- 2010-ம் ஆண்டு கோவை கோட்டம் முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை 1,38,551

2018-ம் ஆண்டு 31.8.2018 வரை பதிவான வாகனங்களின் எண்ணிக்கை 4,03,200. 2018-ம் ஆண்டில் 31.8.2018 வரை 2,26,649 வாகனங்கள் அதிகரித்துள்்ளது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் எண்ணிக்கை 3 மடங்காகி உள்ளது.

கேள்வி:- கோவை, திருப்பூர், நீலகிரி அடங்கிய கோவை கோட்டத்தில் மொத்தம் எவ்வளவு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன?

பதில்:- 3 மாவட்டங்களிலும் மொத்தம் 22 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. புதிய அலுவலகங்கள் திறக்கும் பரிசீலனை இதுவரை இல்லை.

கேள்வி: போக்குவரத்து விதிகளை மீறி தற்காலிக ஓட்டுனா் உாிமம் எவ்வளவு ரத்து செய்யப்பட்டுள்ளது?

பதில்:- மாவட்டம் முழுவதும் தற்காலிக ஓட்டுனா் உாிமம் ரத்து எண்ணிக்கை - 9,051

கேள்வி:- வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் கோவை கோட்டத்தில் அரசுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு?

பதில்:- 2017-ம் ஆண்டு வருவாய் - 71,734.63 லட்சங்கள்

2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்வரை வருவாய் - 33,662.15 லட்சங்கள் (31.08.2018 முடிய)

வாகனங்களின் பதிவை அறிய முடியும்

கேள்வி:- குற்றச்செயலில் ஈடுபடும் வாகனங்களின் பதிவை வைத்து உடனடியாக அடையாளம் காண முடியுமா?

பதில்:- காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை ஓடும் வாக னங்களின் பதிவு எண்ணை வைத்து எந்த ஊர் வாகனங் களையும் அடையாளம் காண முடியும். இதற்காக மத்திய போக்குவரத்து துறை ‘வாகன் வெர்சன்-4’ புதிய இணைய தளத்தை உருவாக்கி உள்ளது. இதனை ‘ஆப்’ ஆக செல் போனில் டவுன்லோடு செய்து கொண்டு குறிப்பட்ட வாகனங்களின் பதிவு எண்ணை அழுத்தினால் அந்த வாகன உரிமையாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெரியும்.

பழைய நடைமுறையில் ஒரு வாகனத்தின் விவரங்கள் அந்தந்த அலுவலக எல்லைக்குட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மூலமாக மட்டுமே தொிந்து கொள்ளமுடியும். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘வாகன் வெர்சன்-4’ இணையதளம் மூலம் வெளிமாநில வாகனங்களின் விவரங்களையும் அறிந்துகொள்ள முடியும்.

கேள்வி:- ஓட்டுனர் உாிமம் பெற புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதா?

பதில்:- ஓட்டுனா் உாிமம் பெற அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. வட்டாரப்போக்கு வரத்து அலுவலகங்களுக்கு விண்ணப்பம் அளித்து ஆன்லைன் மூலமாக பதிவு செய்து விரைவாக உாிமம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழகுனர் பயிற்சி தற்காலிக உரிமம்(எல்.எல்.ஆர்.), மற்றும் நிரந்தர ஓட்டுனர் உரிமம் என்றும் அனைத்தும் ஆன்லைன் மூலமே நடை பெறுகிறது.

அபராத தொகை

கேள்வி:- பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மூலம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை எவ்வளவு?

பதில்:- 2017-ல் பறிமுதல் செய்யப்பட்ட 787 வாகனங்களுக்கு அபராத தொகை ரூ.24,74,900-வசூலிக்கப்பட்டது.

2018-ல் (31.8.2018 வரை) பறிமுதல் செய்யப்பட்ட 258 வாகனங்களுக்கு அபராத தொகை ரூ.5,88,250 வசூலிக் கப்பட்டது.

கேள்வி:- ஓட்டுனர் பயிற்சி பெற புதிய நடைமுறை என்ன?

பதில்:- கணினி மூலமான நவீன டிராக் கரூரில் அமைக்கப் பட்டுள்ளது. இதேபோல் கோவை மத்திய வட்டாரபோக்குவரத்து அலுவலகத்தில் ரூ.32 லட்சம் செலவில் நவீன டிராக் அமைக் கப்பட்டு வருகிறது. இதில் மனித தவறுகளை கணினி மூலம் சரிபார்க்கப்பட்டு மதிப்பெண் வழங்கும். முறையாக போக்கு வரத்து பயிற்சி பெற்றவர் மட்டுமே தேர்ச்சி அடைந்து ஓட்டுனர் உரிமம் பெறமுடியும். இந்த புதிய நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கேள்வி:- விபத்துகளை கட்டுப்படுத்த வட்டார போக்கு வரத்து அலுவலகம் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

பதில்:- இருசக்கர வாகனங்கள் மூலம் அதிக விபத்து உயிரிழப்பு ஏற்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனங் களை ஓட்டுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே இருசக்கர வாகன ஓட்டுபவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும். கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிந்து ஓட்ட வேண்டும். இதுதொடர்பாக போலீசார் மூலம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்கள்

கேள்வி:- மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்கள், ஆட்டோக்களில் பாதுகாப்பு நடவடிக்கை எப்படி எடுக்கப்படுகிறது?

பதில்:- ஆண்டுதோறும் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரே மாணவ-மாணவி களை ஏற்றிச்செல்ல முடியும். ஆட்டோக்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்லக்கூடாது.

இதற்காக அடிக்கடி சோதனைகள் நடத்தப்படுகிறது. தனியார் வேன்கள் மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்கின்றன. இந்த வேன் உரிமையாளர்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் அனுமதி சீட்டு பெற வேண்டும். அனுமதி சீட்டு பெறாத வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வாகனங் களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறதே?

பதில்:- ஆம்னி பஸ்களில் பயணிகளுக்கு பஸ்சில் வைத்து டிக்கெட் கொடுக்க கூடாது. ஆன்லைன் மூலம் அல்லது அலுவலகங்களில் வைத்து மட்டுமே சரியான கட்டணத்தில் டிக்கெட் கொடுத்து பயணிகளை ஏற்ற அறிவுறுத்தப் பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story