கோவையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது


கோவையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sep 2018 9:29 PM GMT (Updated: 13 Sep 2018 9:29 PM GMT)

கோவையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

போத்தனூர், 

கோவை மாவட்டம் மதுக்கரை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மர்ம ஆசாமிகள் சிலர் வீடு புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் கொள்ளையர்கள் குறித்து எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. இதனால் கொள்ளையர்களை கைது செய்ய முடியவில்லை.

இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின் பேரில் பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில், வடவள்ளி இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, மதுக்கரை இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் கொள்ளை நடைபெற்ற வீடுகள் மற்றும் அருகே உள்ள கடைகளில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 29), சென்னை கொளத்தூரை சேர்ந்த ராஜா என்கிற மாணிக்கராஜா (28), சென்னை பொழிச்சலூரை சேர்ந்த ஹரிகரன் (27) ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் 3 பேரும் மதுக்கரை மற்றும் கோவையின் பல்வேறு பகுதிகளில் வீட்டின் பூட்டுகளை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கார் மற்றும் 2 எல்.இ.டி. டிவி, ஹோம் தியேட்டர், 6 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட ராஜா மீது சென்னையில் 70 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story