மணமேல்குடி அருகே சரக்கு ஆட்டோ மீது வேன் மோதல்; பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி


மணமேல்குடி அருகே சரக்கு ஆட்டோ மீது வேன் மோதல்; பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 13 Sep 2018 11:08 PM GMT (Updated: 13 Sep 2018 11:08 PM GMT)

மணமேல்குடி அருகே சரக்கு ஆட்டோ மீது வேன் மோதியதில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் கோபி(வயது 28). இவர் சொந்தமாக மைக் செட் நிலையம் வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று காலை, தனது தந்தை முனியையா(55), அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் சிவப்பிரகாசம் (12) ஆகியோருடன் நாகுடி பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு சரக்கு ஆட்டோவில் மைக் செட், ஜெனரேட்டர் போன்றவற்றை ஏற்றிக் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் மணமேல்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

சரக்கு ஆட்டோவை கோபி ஓட்டினார். பிள்ளையார் திடல் பகுதியில் சரக்கு ஆட்டோ வந்தபோது, அந்த வழியாக ராமநாதபுரத்தில் இருந்து வந்த வேன் எதிர் பாராத விதமாக சரக்கு ஆட்டோ மீது மோதி யது. இதில் சரக்கு ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. இதில் சரக்கு ஆட்டோவில் இருந்த கோபி, சிவப்பிரகாசம், முனியையா, வேனில் பயணம் செய்த இக்பால் ஆகியோர் படுகாயமடைந்தனர். வேன் டிரைவர் மனோகரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த விபத்தை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கோபி, சிவப்பிரகாசம், முனியையா, இக்பால் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கோபி, சிவப்பிரகாசம் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். முனியையா, இக்பால் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியை சேர்ந்த மனோகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த சிவப்பிர காசம் மணமேல்குடியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story