விஷவண்டுகள் கடித்து 12 பேர் காயம்
கம்மாபுரம் அருகே விஷவண்டுகள் கடித்து 12 பேர் காயடைந்தனர்.
கம்மாபுரம்,
காட்டுமன்னார் கோவில் அடுத்த ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரது இல்ல காதணி விழா கம்மாபுரம் அருகே உள்ள சி.கீரனூரில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு விருந்து வழங்கும் வகையில் அந்த பகுதியில் உள்ள மரத்தடியில் வைத்து சமையல் செய்தனர்.
அப்போது அங்கிருந்து வந்த புகையால், மரத்தில் இருந்த விஷவண்டுகள் கலைந்து, அங்கிருந்தவர்களை கடித்தது. இதனால் விழாவுக்கு வந்த அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் அவர்களை துரத்தி, துரத்தி விஷவண்டுகள் கடித்தது.
இதில் பிச்சமுத்து, பாக்கியராஜ், ராஜேசேகர், ராமலிங்கம், பழனியம்மாள், சங்கீதா, சேகர், ரேகா, பச்சமுத்து, உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.