ஏரியில் மூழ்கி உயிரிழந்த 2 மாணவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


ஏரியில் மூழ்கி உயிரிழந்த 2 மாணவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Sep 2018 9:30 PM GMT (Updated: 16 Sep 2018 10:53 PM GMT)

நெய்வேலியில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த 2 மாணவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெய்வேலி, 


நெய்வேலி அருகே உள்ள கைக்கிளார்குப்பம் தண்டபாணி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் அஜித்குமார்(வயது 16). இவருடைய நண்பர் 30-வது வட்டத்தை சேர்ந்த ஆதிமூலம் மகன் மணிகண்டன்(17). அஜித்குமார் நெய்வேலி 10-வது வட்டத்தில் உள்ள என்.எல்.சி. ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-1ம், மணிகண்டன் பிளஸ்-2வும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவில், அஜித்குமார், மணிகண்டன் ஆகியோரது வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். இந்த சிலைகளை கரைப்பதற்காக நேற்று முன்தினம் மாலை கைக்கிளார்குப்பம் பச்சைவாழியம்மன் கோவில் அருகில் உள்ள ஏரிக்கு சென்றனர். சிலையை கரைத்துவிட்டு, ஏரியில் இருவரும் குளித்த போது, நீரில் மூழ்கி பலியானார்கள். இவர்களது உடல் நெய்வேலி என்.எல்.சி. பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைக்கிளார்குப்பம் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள், நெய்வேலி- மந்தாரக்குப்பம் சாலையில் நேற்று முன்தினம் மறியல் செய்ய முயன்றனர். இவர்களை தெர்மல் போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போாது, என்.எல்.சி. புதிய அனல்மின் நிலைய பணிக்காக ஏரியில் இருந்து அதிகளவில் மண் எடுக்கப்பட்டதால் அதிகளவில் ஆழம் உள்ளது. எனவே ஏரியை சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும் என்று என்.எல்.சி. நிர்வாகத்திடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் அமைத்து தரவில்லை. அதனால் தான் தற்போது 2 மாணவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.

எனவே உடனடியாக ஏரிக்கரையில் வேலி அமைக்க வேண்டும். உயிரிழந்த மாணவர்கள் அஜித்குமார், மணிகண்டன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு என்.எல்.சி. நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் அப்போது தான் 2 பேரின் உடலையும் பெற்று செல்வோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, மாணவர்களின் உறவினர்கள், கிராம மக்களுடன் என்.எல்.சி. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை இரவு 10.30 மணி வரையில் நடந்தது, ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் வகையில், மாணவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அனல்மின்நிலையத்துக்கு வந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அனைவரும் என்.எல்.சி. பொது மேலாளர் சுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு ஒன்றை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

மனுவில் தங்களது கோரிக்கைகள் மீது நாளைக்குள்(அதாவது இன்று) உரிய தீர்வு காணாவிட்டால் நெய்வேலி புதிய அனல்மின்நிலையம் முன்பு கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம். அதுவரையில் மாணவர்களின் உடலை பெற்று செல்ல மாட்டோம் என்று தெரிவித்து இருந்தனர்.

இதன் காரணமாக நேற்று 2-வது நாளாக மாணவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்தனர். இதனால் 2 பேரின் உடலும் என்.எல்.சி. பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story