மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை பெற்றோரை இழந்து 4 குழந்தைகள் தவிப்பு


மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை பெற்றோரை இழந்து 4 குழந்தைகள் தவிப்பு
x
தினத்தந்தி 18 Sep 2018 1:15 AM GMT (Updated: 18 Sep 2018 1:15 AM GMT)

குடிப்பழக்கத்தால் ஒரு குடும்பமே சீரழிந்தது. மனைவி இறந்த சோகத்தில் கணவரும் தற்கொலை செய்து கொண்டார். பெற்றோரை இழந்து 4 குழந்தைகள் தவித்து வருகின்றனர்.

முசிறி,


திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த திண்ணக்கோணம் கிராமத்தில் வசித்து வந்தவர் வடிவேல்(வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த மணிமேகலைக் கும் திருமணமாகி, 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். வடிவேலுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

குடிப்பழக்கத்தில் இருந்து கணவரை திருத்த எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாததால் மனமுடைந்த மணிமேகலை விஷம் தின்றார். திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 7-ந்தேதி இறந்தார்.

மனைவி இறந்த நாள் முதல் வடிவேல் சோகத்தில் இருந்தார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், கடந்த 10-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து வடிவேலுவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வடிவேலு இறந்தார். இந்த சம்பவம் குறித்து முசிறி சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதால் அவர்களது 4 குழந்தைகளும் தவித்து வருகின்றனர். குடிப்பழக்கத்தால் ஒரு குடும்பமே சீரழிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story