திருச்சியில் 81 ஆண்டுகள் பழமையான ரெயில் டிக்கெட் அச்சடிக்கும் தொழிற்சாலை மூடப்பட்டது


திருச்சியில் 81 ஆண்டுகள் பழமையான ரெயில் டிக்கெட் அச்சடிக்கும் தொழிற்சாலை மூடப்பட்டது
x
தினத்தந்தி 18 Sep 2018 10:30 PM GMT (Updated: 18 Sep 2018 5:24 PM GMT)

ரெயில்வேயில் நவீனமயமாக்கல் எதிரொலி காரணமாக திருச்சியில் 81 ஆண்டுகள் பழமையான ரெயில் டிக்கெட் அச்சடிக்கும் தொழிற்சாலை மூடப்பட்டது.

திருச்சி,

நாட்டில் ரெயில்வே பாதைகள் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள் காலத்தில் அமைக்கப்பட்டன. நாடு சுதந்திரம் பெற்ற பின் இந்திய ரெயில்வே நிர்வாகம் தொடங்கப்பட்டு ஆங்கிலேய கம்பெனிகளை இணைத்து மண்டலங்களாக உருவாக்கப்பட்டன. அந்த வகையில் தென் இந்தியன் ரெயில்வே கம்பெனியுடன் மெட்ராஸ், மைசூர் கம்பெனிகள் இணைக்கப்பட்டு தெற்கு ரெயில்வே மண்டலம் கடந்த 1951-ம் ஆண்டு உருவானது. தெற்கு ரெயில்வேயில் திருச்சி, சென்னை உள்பட 6 கோட்டங்கள் பிரிக்கப்பட்டன.

தென் இந்தியன் ரெயில்வே கம்பெனியின் தலைமையிடமாக செயல்பட்டு வந்த அலுவலகம் அதன் பின்னர் திருச்சி கோட்ட அலுவலகமானது. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகில் அமைந்துள்ள இந்த அலுவலகம் கடந்த 1937-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் ரெயில் டிக்கெட் அச்சடிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது.

அந்த காலத்தில் ரெயில்வேயில் அட்டை டிக்கெட் முறையே நடைமுறையில் இருந்தது. இங்கு அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரு பகுதிக்கும் வினியோகிக்கப்பட்டு வந்தன. தெற்கு ரெயில்வே மண்டலம் உருவான பின்பும் இங்கிருந்து தான் அட்டை டிக்கெட் அச்சடிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டன.

இந்த நிலையில் ரெயில்வேயில் நவீன மயமாக்கல் எதிரொலியாக அட்டை டிக்கெட்டிற்கு பதிலாக கணினி மூலம் காகித டிக்கெட் வினியோகம் தொடங்கியது. இருப்பினும் சிறிய ரெயில் நிலையங்களில் அட்டை டிக்கெட் வினியோக முறை இன்னும் இருந்து வருகிறது. இந்த நிலையில் திருச்சியில் இயங்கி வந்த ரெயில் டிக்கெட் அச்சடிக்கும் தொழிற்சாலையை ரெயில்வே நிர்வாகம் தற்போது மூடியுள்ளது. இது குறித்து ரெயில்வே ஊழியர்கள் கூறியதாவது:-

கடந்த 1937-ம் ஆண்டு முதல் திருச்சியில் இயங்கி வந்த ரெயில் டிக்கெட் அச்சடிக்கும் தொழிற்சாலை கடந்த 1-ந்தேதி முதல் மூடப்பட்டது. இங்கு தொடக்க காலத்தில் மஞ்சள், வெள்ளை, பச்சை, ஆரஞ்சு, சாம்பல் ஆகிய நிறங்களில் டிக்கெட் அச்சடிக்கப்பட்டன. பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு தனி நிறத்திலும், முதலாம் வகுப்பு, நடைமேடைகளுக்கு தனி டிக்கெட்டும் அச்சடிக்கப்பட்டன. தொடக்கத்தில் 850 ரெயில் நிலையங்களுக்கான டிக்கெட்டுகள் அச்சடித்து வழங்கப்பட்டன.

கணினிமயமாக்கலுக்கு பின்பு 200 சிறிய ரெயில் நிலையங்களுக்கு மட்டும் அட்டை டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு வந்தன. மைசூர் தொழிற்சாலை மூடிய பின் அங்கு 150 ரெயில் நிலையங்களுக்கு அச்சான டிக்கெட்டுகளும் இங்கு கூடுதலாக சேர்ந்தன. கடந்த ஆகஸ்டு மாதத்திற்கு முன்பு வரை 12 லட்சம் அட்டை டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டன.

இந்த நிலையில் நவீனமயமாக்கல், செல்போன்களில் செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி, காகிதமற்ற முறையை கையாளுதல் உள்ளிட்ட நடவடிக்கையால் அட்டை டிக்கெட் அச்சடிக்கும் தொழிற்சாலையை ரெயில்வே நிர்வாகம் மூட முடிவு செய்தது. தற்போது இதனை மூடிவிட்டு தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் டிக்கெட் அச்சடிக்கும் முயற்சியை ரெயில்வே தொடங்கி உள்ளது. சென்னையில் தனியார் நிறுவனம் மூலம் அட்டை டிக்கெட் அச்சடிக்கப்பட்டு ரெயில் நிலையங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொழிற்சாலை மூடப்பட்டதால் அதில் பணியாற்றி வந்த ஊழியர்கள் வேறு பிரிவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 81 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரெயில் டிக்கெட் அச்சடிக்கும் தொழிற்சாலை மூடப்பட்டது ரெயில்வே ஊழியர்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. ரெயில்வே தொழிற்சாலையில் டிக்கெட் அச்சடிக்கப்பட்ட போது பாதுகாப்பான முறையில் இருந்து வந்ததாகவும், தற்போது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் ரெயில்வே வட்டாரத்தில் குற்றம்சாட்டினர்.

பாரம்பரியமான தொழிற்சாலையில் இருந்த அனைத்து எந்திரங்களும் ஆங்கிலேயர்கள் காலத்தில் உடையது. இதனை ரெயில்வே அருங்காட்சியகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story