ஆக்ரோஷமான அலைகளால் தனுஷ்கோடியில் கரையை நெருங்கி வந்த கடல்


ஆக்ரோஷமான அலைகளால் தனுஷ்கோடியில் கரையை நெருங்கி வந்த கடல்
x
தினத்தந்தி 18 Sep 2018 11:15 PM GMT (Updated: 18 Sep 2018 8:48 PM GMT)

ஆக்ரோஷமான அலைகளால் கரையை கடல் நெருங்கி வந்தது போன்று மாறியது. இதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் செல்போன்களில் படம் பிடித்துக்கொண்டனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி பகுதியில் வழக்கமாகவே கடல் கொந்தளிப்பாக காணப் படும். எனவே பாதுகாப்பு கருதி தனுஷ்கோடி கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடந்த 2 நாட்களாக கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படுகிறது. கடல் அலைகள் ஆக்ரோஷமாக வந்தன. கடற்கரையை கடல்நீர் சூழ்ந்ததால், கரையை கடல் நெருங்கி வந்தது போல் காணப்பட்டது.

அதாவது, அரிச்சல்முனை பகுதியில் மணல் பரப்பாக காணப்பட்ட கடற்கரையானது நேற்று கடலாக காட்சி தந்தது.

சுற்றுலா பயணிகள் இதை ஆச்சரியத்துடன் நின்று வேடிக்கை பார்த்தனர். செல்போன்களிலும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கடலில் சுற்றுலா பயணிகள் யாரும் இறங்கி குளிக்கக் கூடாது என எழுதப்பட்டு கடற்கரையில் வைத்த எச்சரிக்கை பலகை கடலுக்குள் சென்றது போன்று மாறிவிட்டது. எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் மீன்பிடி துறைமுகத்தை தாண்டியும் கடல் அலைகள் சீறி வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story