காதல் கணவர் கண் எதிரே மனைவி காரில் கடத்தல்


காதல் கணவர் கண் எதிரே மனைவி காரில் கடத்தல்
x
தினத்தந்தி 19 Sep 2018 9:30 PM GMT (Updated: 19 Sep 2018 9:25 PM GMT)

பவானியில் காதல் கணவர் கண் எதிரே மனைவி காரில் கடத்தி சென்றனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பவானி, 

பவானி அருகே உள்ள ஜம்பை அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் சரத்குமார் (வயது 25). இவர் ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். ஜம்பை தளவாய்பேட்டை காட்டூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகள் கவிதா (23). என்ஜினீயரிங் பட்டதாரி. சரத்குமாரும், கவிதாவும் தளவாய்பேட்டை அரசுப் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது, 2 பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 6-ந் தேதி நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே கத்தேரியில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். 

அதைத்தொடர்ந்து 2 பேரும் ஆந்திராவுக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் கவிதாவிடம் அவருடைய பெற்றோர் ‘சொத்தில் எவ்வித உரிமையும் கேட்க மாட்டேன்’ என எழுதி கொடுத்துவிட்டுச் செல்லுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சரத்குமாரும், கவிதாவும் பவானிக்கு வந்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பவானி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று எழுதி கொடுத்துவிட்டு கவிதா கணவருடன் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அலுவலக வளாகத்தில் ஒரு கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய 8 பேர் கொண்ட கும்பல் கவிதாவை காரில் கடத்தி சென்றது. 

இதுகுறித்து சரத்குமார் பவானி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story