தர்மபுரி மாவட்டத்தில் சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


தர்மபுரி மாவட்டத்தில் சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 22 Sep 2018 10:30 PM GMT (Updated: 22 Sep 2018 9:33 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் மகா சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் சிவபெருமான் மற்றும் நந்திக்கு பல்வேறு வாசனை திரவியங்கள், பழங்கள், பால், சந்தனம், தயிர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி உடனுறை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷத்தையொட்டி சாமி மற்றும் நந்திக்கு மகாஅபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தர்மபுரி நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சாமிக்கு நேற்று மாலை பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோன்று தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி கடைவீதி அம்பிகாபரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவானேஸ்வரர் கோவில், அரிகரநாதசாமி கோவில், அன்னசாகரம் மகாலிங்கேஸ்வரர் கோவில், மதிகோன்பாளையம் சிவன்கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

வரலாற்று சிறப்பு மிக்க அரூர் அருகே உள்ள தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரியை அடுத்த சவுளுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Next Story