அருணாசலேஸ்வரர் கோவில்: 5 தேர்களை பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆய்வு


அருணாசலேஸ்வரர் கோவில்: 5 தேர்களை பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 26 Sep 2018 11:15 PM GMT (Updated: 26 Sep 2018 10:14 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழாவை முன்னிட்டு தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளின் ஒரு கட்டமாக 5 தேர்களை பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகாதீப திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான தீப திருவிழா நவம்பர் மாதம் 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் தீப திருவிழாவிற்கான பூர்வாங்க பணிகள் முறைப்படி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தீப திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இதில் 7-ம் நாள் திருவிழாவின் போது பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் நடைபெறும். இந்த தேர்களானது 2 மாதத்திற்கு முன்பே பொதுப் பணித்துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும்.

அதன்படி நேற்று கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 மரத் தேர்களையும் திருவண்ணாமலை பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் மதிவாணன், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இது குறித்து செயற்பொறியாளர் மதிவாணன் கூறுகையில், “தீபத் திருவிழா வர உள்ளதால் அதற்காக கோவில் முன்பு உள்ள 5 தேர்களும் தேரோட்டத்திற்கு தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பொது பணித் துறை அலுவலர்கள் மூலம் இந்த தேரின் கட்டமைப்பு மற்றும் தேருக்கு உள் உள்ள மரசாமான்கள் குறித்தும் பார்வையிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இது போன்று 3 முறை ஆய்வு செய்யப்படும். ஆய்வின்போது கண்டறியப்பட்ட குறைகள் சரி செய்யப்பட்டபின் இந்த 5 தேர்களும் தேரோட்டத்திற்கு தயார் என்று பொதுப் பணித்துறை மூலம் தகுதி சான்று வழங்கப்படும்” என்றார்.



Next Story