கடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணி


கடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணி
x
தினத்தந்தி 1 Oct 2018 6:10 AM GMT (Updated: 1 Oct 2018 6:10 AM GMT)

இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான கடற்படையில், பல்வேறு பயிற்சி நுழைவின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது எக்ஸிகியூட்டிவ் பிராஞ்ச் ( சட்டம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ், ஐ.டி.) ஜூலை 2019 பயிற்சியில் சேர, பட்டதாரி என்ஜினீயர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன. திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இதில் சேர விண்ணப்பிக்கலாம். மொத்தம் 37 பேர் இந்த பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள். இதில் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் 20 இடங்களும், ஐ.டி. பிரிவில் 15 பேரும், சட்டப் பிரிவில் 2 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். ஐ.டி. பிரிவில் ஆண்கள் மட்டுமே சேர முடியும். இவை ஷாட் சர்வீஸ் கமிஷனின் கீழ் வரும், குறுகிய கால பணிவாய்ப்பாகும்.

இந்த பயிற்சியில் சேர விரும்பும், விண்ணப்பதாரர் 19½ முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2-7-1994 மற்றும் 1-1-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.

பி.இ., பி.டெக் துறை பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம். ஐ.டி. தொடர்பான பொறியியல், டெக்னிக்கல் மற்றும் அறிவியல் படிப்பு படித்தவர்கள் ஐ.டி. பிரிவில் சேரலாம். எல்.எல்.பி. படித்தவர்கள் சட்டப்பிரிவு பணிக்கு சேர விண்ணப்பிக்கலாம்.

ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், பெண் விண்ணப்பதாரார்கள் 152 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும்.

சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) மூலம் இதற்கான தேர்வுகள் நடத்தப்படும். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு விண்ணப்பதாரரின் தகுதிகள் சோதிக்கப்படும். நுண்ணறிவுத் தேர்வு, படங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடுதல், உளவியல் தேர்வு, குழு தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடைபெறும். இவற்றில் தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவ தேர்வுக்குப் பின்னர் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் : 5-10-2018-ந் தேதியாகும்.

மேலும் விரிவான விவரங்களை www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story