கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்


கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 4 Oct 2018 11:00 PM GMT (Updated: 4 Oct 2018 6:53 PM GMT)

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் 1 நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கபட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் பணியாளர் பகுப்பாய்வு குழுவினை கலைத்திட வேண்டும்.

5 ஆயிரம் அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் 1 நாள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை விளக்கி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, வட்ட செயலாளர் சிவகுமார், ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகி சக்திவேல், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகி தியாகராஜன், ஆசிரியர் மன்ற நிர்வாகி பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் புஷ்பநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவகுரு, மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணைத்தலைவர் கவுசிக், மாவட்ட தலைவர் காளிமுத்து, அங்கன்வாடி பணியாளர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் பிரேமா, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அந்தோணிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்ட தலைவர் பாலசுந்தரம், வேளாண்மை அலுவலர் சங்க ஒன்றிய தலைவர் செந்தில், அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். தற்செயல் விடுப்பு போராட்டத்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாசில்தார் அலுவலகம் ஆகியவற்றில் பணிகள் எதுவும் நடைபெறாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.

நீடாமங்கலத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோரிக்கைகளை விளக்கி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர் ராஜா தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க தலைவர் இளமாறன், ஆசிரியர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் பேசினார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கையில் குடையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடவாசல் தாசில்தார் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் 1 நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தை விளக்கி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு குடவாசல் அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் தெட்சிணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ராஜமாணிக்கம், உடற்கல்வி ஆசிரியர் மாவட்ட இயக்குனர் கழக மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செய்தி தொடர்பு செயலாளர் உமாநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளார் ரவி நன்றி கூறினார்.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தற்செயல் விடுப்பு போராட்டத்தில் சுமார் 11 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

திருத்துறைப்பூண்டி வட்டக்கிளை ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து பணிக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்ட தலைவர் ராஜேந்திரன், வட்டச்செயலாளர் அழகரசன், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக ஆசிரியர் முன்னேற்ற சங்க வட்ட செயலாளர் செந்தில்குமார், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரகுமார், அரசு ஊழியர் சங்க வட்ட இணைச்செயலாளர் லெனின், துணைத்தலைவர் தனபால், வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்ட செயலாளர் ஜோதிபாஸ், வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாவட்ட பொருளாளர் பாண்டியன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் ரவிதாஸ், ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்க பொறுப்பாளர்கள் தமிழ்சுடர், மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story